2-ஆம் நம்பர் பங்களா ஒதுக்காட்டி நான் என் சொந்த வீட்லயே தங்குவேன்- எடியூரப்பா பிடிவாதம்
2-ஆம் நம்பர் வீடு கேட்டால் 4-ஆம் நம்பர் வீடு ஒதுக்குகிறீர்கள். எனக்கு அரசு வீடே வேண்டாம் என எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூர்: 2-ஆம் நம்பர் பங்களா ஒதுக்கவில்லை என்றால் நான் என் வீட்டிலேயே தங்குவேன் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
கர்நாடகத்தில் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் தந்திரங்களை செய்து முதல்வரானார் எடியூரப்பா. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதும் அது 3 நாட்கள்தான் நீடித்தது. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு அரசு சார்பில் தங்குமிடங்கள் ஒதுக்கப்பட்டன.
வேறு பங்களா ஒதுக்கீடு
இதில் முதல்வராக இருந்த எடியூரப்பா ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள 2-ஆம் எண் கொண்ட பங்களாவை ஒதுக்குமாறு கேட்டிருந்தார். ஆனால் குமாரசாமி அரசு அதை கொடுக்க மறுத்து 4-ஆம் எண் கொண்ட பங்களாவை ஒதுக்கியது.
சொந்த வீடு
இதற்கு எடியூரப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அதிருப்தியடைந்த எடியூரப்பா, என்னுடைய கோரிக்கையை முதல்வர் ஏற்கவில்லை. அரசால் எனக்கு வழங்கப்பட்ட இடத்தை நான் வசிக்க மாட்டேன். டாலர்ஸ் காலனியில் எனக்கு சொந்தமான வீட்டில் தங்கிக் கொள்வேன் என்றார்.
சிரமம்
இதுகுறித்து குமாரசாமி கூறுகையில் எடியூரப்பாவுக்கென்று பங்களா ஒதுக்கிவிட்டோம். அவர் கேட்ட 2-ஆம் நம்பர் பங்களாவை அமைச்சர்கள் பலர் கேட்கின்றனர். இதனால் அதை எடியூரப்பாவுக்கு ஒதுக்குவதில் சிரமம் உள்ளது.
அதிர்ஷ்ட வீடு
நான் அவருக்கு பங்களை ஒதுக்கி விட்டேன். இனி அந்த பங்களாவில் அவர் வசிப்பதும் வசிக்காமல் இருப்பதும் அவரது விருப்பம் என்றார். எடியூரப்பா முதல்வராக இரு்நத போது 2-ஆம் நம்பர் பங்களாவில் இருந்தார். அங்கு வாஸ்து படி சில வற்றை மாற்றியுள்ளார். அதனால் அதை அதிர்ஷ்டமாக கருதுகிறார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.