20 தமிழர்கள் படுகொலை.. நடிகை குஷ்பு கடும் கண்டனம்.. 'சிபிஐ விசாரணை வேண்டும்'!
டெல்லி: 20 தமிழர்கள் ஆந்திர போலீஸால் படுகொலை செய்யப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் நடிகையும் காங்கிரஸ் பிரமுகருமான குஷ்பு.
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள நடிகை குஷ்பு நேற்று முதன் முதலாக டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது 20 தமிழர்கள் படுகொலை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த குஷ்பு, "திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்களை ஆந்திர மாநில போலீசார் சுட்டுக்கொன்றிருப்பது மிகுந்த வேதனை தருகிறது. இந்தப் படுகொலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அது என்கவுண்டரா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலையா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
20 தமிழர்களின் உடல்களில் காணப்படும் குண்டு காயங்கள் பல்வேறு சந்தேகத்தை கொடுக்கிறது. மேலும் உடல்கள் கிடந்த இடத்தில் பழைய செம்மரக்கட்டைகள் போடப்பட்டிருந்தது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
எனவே இந்த சம்பவத்தில் உண்மையை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துகிறது. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்படும் வரை காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும்," என்றார்.












Click it and Unblock the Notifications