லண்டனில் அரசியல் படிப்பு… மீண்டும் தீவிரமாக களமிறங்கும் ‘குத்து’ ரம்யா
பெங்களூர்: அரசியல் வாழ்வு அவ்வளவுதான் இனி சினிமாவில்தான் ரம்யாவை பார்க்கலாம் என்று எண்ணியிருந்த நிலையில் லண்டன் சென்று அரசியல் படிப்பு படித்து விட்டு வந்துள்ள ரம்யா, தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தியை சந்தித்து மீண்டும் அரசியலில் இணைத்துக்கொண்ட ரம்யா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
கிரி', ‘குத்து', ‘பொல்லாதவன்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், கன்னடப் படங்களிலும் நடித்தவர் ரம்யா. கர்நாடகத்தை சேர்ந்த இவர் சில வருடங்களுக்கு முன் காங்கிரசில் சேர்ந்து அரசியலில் குதித்தார்.
மாண்டியா தொகுதி எம்.பி
கடந்த 2013ம் ஆண்டு மாண்டியா எம்.பி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ரம்யா. முதல்முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். இவருடன் நடித்த பல நடிகைகள் இதனால் பொறாமையில் பொசுங்கித்தான் போனார்கள்.
தோல்வியடைந்த ரம்யா
ஒரு வருடம் கூட இல்லை, கடந்த 2014ம் ஆண்டு நடந்த லோக்சபா பொது தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசியதால் ரம்யா தோல்வி அடைந்தார். இந்த நிலையில் காங்கிரசில் ரம்யாவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. தனிப்பட்ட முறையிலும் அவரை கடுமையாக விமர்சித்தார்கள்.
ஒதுங்கிய ரம்யா
சில காலம் அரசியலை விட்டு ஒதுங்கிய ரம்யா, சினிமாவில் கூட நடிக்காமல் தலைமறைவானார். அவர் எங்கிருக்கிறார் என்று எல்லோரும் தேட லண்டன் சென்று ஓய்வு எடுத்தார். அங்கிருந்து திரும்பிய ரம்யா மீண்டும் அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார்.
ராகுல்காந்தியுடன் சந்திப்பு
புனேயில் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொழில்நுட்ப கல்லூரி விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தியவர்களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதில் ராகுல் காந்தியுடன் ரம்யாவும் கலந்து கொண்டார்.
விவசாயிகளுக்கு ஆறுதல்
அதன்பிறகு மாண்டியாவில் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரம்யா, லண்டனில் அரசியல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் பற்றி படித்தேன்.
எஸ்.எம்.கிருஷ்ணா ஆலோசனை
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்தேன். அவர் எனக்கு பல ஆலோசனைகள் வழங்கினார். விவசாயிகள் பிரச்சினையில் கவனம் செலுத்த எஸ்.எம்.கிருஷ்ணா ஆலோசனைகள் வழங்கினார். இதைத் தொடர்ந்து விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினேன் என்று கூறியுள்ளார் ரம்யா. எப்படியோ இதுவரை ஒதுங்கியிருந்த ரம்யா, தீவிர அரசியலில் களமிறங்கிவிட்டார் என்று அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.