ஆக்சிஜன் திடீரென தடைபட்டதால் 4 நோயாளிகள் பலி... மருத்துவமனை ஊழியரின் அலட்சியத்தால் நேர்ந்த பரிதாபம்
தர்பங்கா : பீகார் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள வென்டிலேட்டரில் ஆக்சிஜன் திடீரென தடைபட்டு போனதால் 4 நோயாளிகள் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தர்பங்கா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிலருக்கு வென்டிலேட்டர் மூலமாக ஆக்சிஜன் வாயு செலுத்தப்பட்டு வந்தது.

பணியின்போது ஆக்சிஜன் வாயு சப்ளை செய்யும் பொறுப்பில் இருந்த அம்லேஷ் பிரசாத் என்ற மருத்துவ உதவியாளர், நேற்று காலை தனது பணி முடிந்ததும், அந்த பொறுப்பை ஏற்கும் மாற்றுப் பணியாளர் வரும்வரை காத்திருக்காமல் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்று விட்டார்.
அதன்பின்னர் வென்டிலேட்டரில் திடீரென ஆக்சிஜன் தடைபட்டது. இதன் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். காலை 6 மணியில் இருந்து 9 மணிக்குள் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இந்த மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட ஆடசியர் உத்தரவிட்டுள்ளார். பணியில் அலட்சியமாக இருந்த மருத்துவ உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications