லட்டு விற்பனையில் நஷ்டமாம்... விலையை உயர்த்தப் போகிறது திருப்பதி தேவஸ்தானம்
திருமலை: பிரம்மோச்சவத்தை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் விலையை உயர்த்துவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் இலவசமாகவும், சலுகை வகையிலும் கூடுதல் விலைக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.

நடைபாதை வழியாக வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதமும், ஒரு லட்டு ரூபாய் 10 வீதம் 2 லட்டுகளும் வழங்கப்டுகின்றன. மேலும் ரூபாய் 50, ரூபாய் 300 செலுத்தி சிறப்பு தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு இலவசமாக 2 லட்டுகளும் தர்ம தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ரூபாய் 10 வீதம் 2 லட்டுகளும் வழங்கப்படுகின்றன.
மேலும் கூடுதலாக தேவைப்படும் பக்தர்களுக்கு ஒரு லட்டு ரூபாய் 25க்கு வழங்கப்படுகிறது. தினமும் சராசரியாக 3 லட்சம் லட்டு பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு லட்டு தயாரிக்க ரூபாய் 38 வரை செலவாகும் என்றும் இதனால் லட்டு விற்பனை தொடர்ந்து நஷ்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தேவஸ்தான அறங்காவலர் குழுவின் தலைவர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி, "பக்தர்களுக்கு லட்டு பிரசாதத்தை தரமாகவும் குறைந்த விலையிலும் தடையின்றி வழங்கி வருகிறோம். இந்நிலையில் மூலப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளதால் லட்டு விலையை உயர்த்துவது குறித்து அறங்காவலர் குழு கூட்டத்தில் கலந்தாலோசித்து விரைவில் முடிவெடுக்கப்படும். வரும் 16 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் பிரம்மோற்சவத்திற்கு பிறகு இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications