சோனியா குடும்பத்துடன் அருண்ஜேட்லியின் புகைப்படம்: ட்விட்டரில் குடைச்சல் கொடுக்கும் லலித் மோடி!!
டெல்லி: நாட்டை விட்டு தப்பி ஓடி தலைமறைவான பின்னரும் அவ்வப்போது இந்திய அரசியலிலும் கிரிக்கெட் உலகிலும் குட்டையைக் குழப்பிக் கொண்டுதான் இருக்கிறார் லலித் மோடி. இப்போது அருண் ஜேட்லியை காலி செய்யும் வகையில் ட்விட்டரில் பெரும் போரையே நடத்திக் கொண்டிருக்கிறார் லலித் மோடி.
ஐ.பி.எல். போட்டிகளின் பிதாமகனாக வருணிக்கப்பட்ட லலித் மோடி, கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சீனிவாசன் பொறுப்பேற்ற பின்னர் ஓரங்கட்டப்பட்டார். பின்னர் நிதி மோசடி புகார் கொடுக்கப்பட லலித் மோடி நாட்டை விட்டே தப்பி ஓடி லண்டனில் தஞ்சமடைந்தார்.
அவர் மீதான வழக்குகள் நிலுவையில்தான் இருக்கின்றன. ஆனால் இந்திய கிரிக்கெட் விவகாரத்திலும் அரசியலிலும் அவ்வப்போது தலையைக் காட்டி நாரதர் வேலையை செய்து கொண்டுதான் இருக்கிறார் லலித் மோடி.
மெய்யப்பனுக்கு குடைச்சல்
கடந்த 6வது ஐ.பி.எல். பிக்ஸிங் விவகாரத்தில் குருநாத் மெய்யப்பன் சிக்கிய போது அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிதான் என்பதற்கான பழைய ஆதாரங்களை ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் போட்டு குடைச்சல் கொடுத்தார் மோடி.
சீனிக்கு ஆப்புக்கு தயார்
தற்போது கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசனுக்கு எதிராக உச்சநீதிமன்றம் கருத்துகளை தெரிவித்து அவரை தற்காலிக நீக்கம் செய்துள்ளது. இதை முன்னுதாரணமாகக் கொண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இருந்தும் சீனியை நீக்க வேண்டும் என்று ட்விட்டரிலேயே வலியுறுத்தி வருகிறார் லலித் மோடி.
இப்போ அருண்ஜேட்லி
அத்துடன் பாரதிய ஜனதாவில் நரேந்திர மோடிக்கு எதிரணியாக கருதப்படும் அருண் ஜேட்லிக்கு எதிராகவும் ட்விட்டர் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் லலித் மோடி.
அவங்கெல்லாம் ஒரு குடும்பமப்பா
கிரிக்கெட் வாரியத்துடனும் சீனிவாசனுடனும் நெருக்கமாக இருப்பவர் அருண் ஜேட்லி. கிரிக்கெட் போட்டி ஒன்றில் அருண் ஜேட்லி, பிரியங்கா, ராகுல், ராபர்ட் வதேரா ஆகியோர் மிக உற்சாகமாக ஒருசேர துள்ளி மகிழும் போட்டோவை ரிலீஸ் செய்திருக்கிறார் லலித் மோடி.
|
முட்டாளாக்கும் அருண் ஜேட்லி
ராபர்ட் வதேரா மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் கூறப்படும் நிலையில் அருண் ஜேட்லியால் ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது.. ஏனென்றால் அவர்களெல்லாம் ஒரே குடும்பம் என்று நக்கலடித்துக் கொண்டிருக்கிறார்.
அத்துடன் அமிர்தசரஸ் மக்களை ஏமாற்றிக் கொண்டு காங்கிரஸுக்கு எதிராக பேசி வரும் அருண் ஜேட்லியை பாரீர் என்றும் இந்த போட்டோவை நாள்தோறும் போட்டு ட்விட்டரில் கலாய்த்துக் கொண்டிருந்தார் லலித் மோடி.