மோடி அரசை தூக்கி எறிய மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்: லாலு பிரசாத்
கொல்கத்தா: மத்தியில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசை தூக்கி எறிய மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வராக 2-வது முறையாக மமதா பானர்ஜி இன்று பதவியேற்றார். கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த பதவி ஏற்பு விழாவில் லாலு பிரசாத் யாதவும் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது:
பீகாரைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் சங் பரிவாரங்களை (பாஜக) தோற்கடித்திருக்கிறார் மமதா பானர்ஜி. கடந்த 2 ஆண்டுகாலத்தில் நாட்டின் முன்னேற்றத்துக்கு மோடி அரசு எதுவும் செய்யவில்லை.
நாட்டு மக்களிடையே பிளவையும் வெறுப்பையும் தூண்டுகிற பேச்சுகளைத்தான் பரப்பி இருக்கிறார்கள். இந்த தருணத்தில் ஒத்த கருத்துள்ள கட்சிகளின் தலைவர்கள் ஒன்று கூடி மத்தியில் ஆளும் பாஜக அரசை தூக்கி எறிவதற்கான வியூகங்கள் வகுக்க வேண்டும்.
இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
இருப்பினும் யார் இதற்கான முயற்சிகளை முன்னெடுக்கிறார்கள்? என்பது உள்ளிட்ட விவரங்களை லாலு பிரசாத் விவரிக்கவில்லை. கடந்த பீகார் சட்டசபை தேர்தல் முடிவடைந்த போதும் இதேபோன்ற ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. ஆனால் தேசிய அளவில் பாஜகவுக்கு மாற்றான ஒரு அணியை உருவாக்கும் முயற்சிகள் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications