8 எம்.எல்.ஏக்கள் வந்தா போதும்.. நிதிஷ்குமாரின் ஒட்டு மொத்த பிளானும் பர்ஸ்ட்..லாலு போடும் கணக்கே வேற!
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே திரும்பி விடுவார் என கூறப்பட்டு வருகிறது. இதனையடுத்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரான முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தமது கட்சி எம்.எல்.ஏக்கள் அவசர கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
பீகாரில் 2020-ம் ஆண்டு பாஜகவுடன் இணைந்து நிதிஷ்குமாரின் ஜேடியூ சட்டசபை தேர்தலை சந்தித்தது. அத்தேர்தலில் லாலுவின் ஆர்ஜேடி அதிக இடங்களைப் பெற்ற போதும் பாஜக, ஜேடியூ இணைந்து ஆட்சி அமைத்தது. பாஜக- ஜேடியூ கூட்டணி ஆட்சியின் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றார். ஆனால் 2022-ம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து நிதிஷ்குமாரின் ஜேடியூ வெளியேறியது. அத்துடன் ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை நிதிஷ்குமார் அமைத்தார்.

மீண்டும் பாஜகவுக்கு ஓடும் நிதிஷ்குமார்?: இந்த நிலையில் தற்போது மீண்டும் பாஜக கூட்டணிக்கே திரும்புவது என நிதிஷ்குமார் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இதனால் பீகாரில் மட்டுமல்ல தேசிய அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணியை உருவாக்கியவர் நிதிஷ்குமார். இப்போது "இந்தியா" கூட்டணியை கைவிட்டு விட்டு பாஜக பக்கம் நிதிஷ்குமார் சாயக் கூடும் என்பதால் தேசிய அரசியலும் பரபரத்துக் கொண்டிருக்கிறது.
நிதிஷ்குமார் திட்டம்?: நிதிஷ்குமாரைப் பொறுத்தவரை பாஜகவுடன் இணைந்து மீண்டும் புதிய கூட்டணி ஆட்சி அமைப்பது; அப்படி ஆட்சி அமைந்த உடன் சட்டசபையை கலைக்க பரிந்துரை செய்துவிட்டு லோக்சபா தேர்தலுடன் இணைந்து மாநில சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது என்கிற வியூகத்துடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
8 எம்.எல்.ஏக்கள் தேவை: ஆனால் நிதிஷ்குமாரின் வியூகத்தை முறியடிப்பதில் லாலு பிரசாத் யாதவ் தீவிரம் காட்டி வருகிறாராம். பீகாரில் மொத்தம் 243 இடங்கள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 122 இடங்கள். தற்போதைய நிலையில் லாலு அணிக்கான எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை: ஆர்ஜேடி 79; காங்கிரஸ் 19; இடதுசாரிகள் 19 மொத்தம் 114 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. இன்னும் 8 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தந்தால் பாஜகவுடன் இணைந்து நிதிஷ்குமார் ஆட நினைக்கும் ஆட்டத்தை முறியடிக்க முடியும் என்பது லாலுவின் திட்டம். இதற்காக தமது எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை லாலு பிரசாத் யாதவ் கூட்டியுள்ளார். பாஜகவுடன் நிதிஷ்குமார் இணைந்தால் அவரது ஜேடியூவின் 14 எம்.எல்.ஏக்கள் லாலு பக்கம் தாவக் கூடும் அல்லது ராஜினாமா செய்யக் கூடும் என்கிற தகவலும் வலம் வருகிறது. ஜேடியூவின் 14 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டால் சட்டசபையின் மொத்த எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால் ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகள் எளிதாகவே ஆட்சி அமைக்கவும் முடியும் என்பது யதார்த்தம். இதனால் வெல்லப் போவது நிதிஷ்குமாரா? லாலு பிரசாத் யாதவா? என்கிற பரபரப்பும் எதிர்பார்ப்பும் உருவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications