ஊழல் பணத்தில் பெரும்பங்கை சுருட்டிவிட்டு 17 ஆண்டுகளாக சிபிஐயிடம் சிக்காத லாலுவின் மாஜி உதவியாளர்
பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் முன்னாள் உதவியாளரும், தீவன ஊழல் பணத்தில் பெரும்பகுதியை எடுத்துக் கொண்டவருமான முகுல் கிஷோர் கபூர் கடந்த 17 ஆண்டுகளாக சிபிஐ கையில் சிக்காமல் தப்பித்து வருகிறார்.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் இந்த ஊழலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான லாலுவின் முன்னாள் உதவியாளர் 17 ஆண்டுகளாக சிபிஐ கையில் சிக்காமல் உள்ளார்.

6 ஆண்டுகள்
முகுல் கிஷோர் கபூர் கடந்த 1990ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை லாலுவின் உதவியாளராக இருந்தார். மாட்டுத் தீவன ஊழலில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

தலைமறைவு
தீவன ஊழல் விவகாரம் வெளியே வந்ததும் முகுல் தலைமறைவாகிவிட்டார். அவர் டேராடூனில் வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. ஆனால் 17 ஆண்டுகளாக சிபிஐ கையில் சிக்காமல் உள்ளார்.

பெரும் பங்கு பணம்
தீவன ஊழல் குறித்து அனைவரையும் விட முகுலுக்கு தான் அதிக விவரம் தெரியும். அவர் தான் லாலுவின் வலக்கை, இடக்கையாக இருந்தவர். முகுல் தான் ஊழல் பணத்தில் பெரும்பங்கை வைத்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முகுல் கிடைத்தால்
முகுலை கைது செய்தால் தீவன ஊழல் குறித்து மேலும் பல தகவல் கிடைக்கும். 90களில் பீகாரில் லாலுவுக்கு அடுத்தபடியாக சக்திவாய்ந்தவராக இருந்தவர் முகுல் என்று மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

லாலுவை காப்பாற்ற
முகுல் கைதானால் லாலுவுக்கு மேலும் சிக்கல் ஏற்படும் என்பதால் அவரை தலைமறைவாக இருக்க வற்புறுத்தியுள்ளனர் என்று பீகார் மாநில பாஜக தலைவர் நிதின் நவின் தெரிவித்தார்.

டேராடூன்
முகுல் டேராடூனில் ஆரோக்கியமாகவும், நல்லபடியாகவும் வாழ்வதாக அவருக்கு நெருக்கமானவர்களும், உறவினர்களும் தெரிவித்தனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு முகுல் 2 வீடுகள் வாங்க பாட்னா வந்ததாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications