பிரதமர் மோடி பதவி பிரமாணத்தை தப்பாக வாசித்தார்.. மீண்டும் பிரமாணம் எடுக்க லாலு கோரிக்கை
பாட்னா: என் மகன் மட்டும் பதவி பிரமாணம் செய்யும்போது தப்பாக வாசிக்கவில்லை, பிரதமர் நரேந்திரமோடியே அப்படித்தான் வாசித்தார் என்று குற்றம்சாட்டியுள்ள ராஷ்டிரிய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், மோடியையும், மீண்டும் பதவி பிரமாணம் எடுக்க குடியரசு தலைவர் ஆணையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 20ம் தேதி பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றது. லாலுவின் இளைய மகன் தேஜஸ் யாதவ் துணை முதல்வராகவும், மூத்த மகன், தேஜ் பிரதாப் யாதவ், அமைச்சராகவும் பதவியேற்றனர். ஆளுநர், ராம்நாத் கோவிந்த், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தேஜ் பிரதாப் பதவி பிரமாணம் எடுக்கும்போது, அபெக்ஷித் (வேண்டுகோள்) என்ற வார்த்தை பதிலாக உபக்ஷித் (புறக்கணிப்பு) என்று படித்தார். அப்போது ஆளுநர் குறுக்கிட்டு மீண்டும் பதவி பிரமாணத்தை சரியாக வாசிக்ககூறினார்.
இந்த சம்பவத்தால் லாலு மகன் திறமை மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், லாலு தனது டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில், நரேந்திரமோடி, கடந்த ஆண்டு நாட்டின் பிரதமராக பதவியேற்ற விழா வீடியோவை எடுத்துப்போட்டு, மோடியும் பிரமாணத்தின்போது தவறான உச்சரிப்பை வெளிப்படுத்தினார், என்று குறிப்பிட்டுள்ளார்.
அக்ஷுன் (நிலைநிறுத்துவேன்) என்ற ஹிந்தி வார்த்தைக்கு பதிலாக, மோடி அக்ஷான் என்று வாசித்ததாக லாலு குறிப்பிடுகிறார். மோடி கூறிய வார்த்தைக்கு பொருள் கிடையாதாம். இதைகுறிப்பிட்டுள்ள, லாலு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இதில் தலையிட்டு, மோடியை மீண்டும் பதவி பிரமாணம் செய்ய வைக்க வேண்டும் எனவும் தனக்கே உரித்தான பாணியில் குத்திக்காட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications