கடும் எதிர்ப்புக்கு இடையே லோக்சபாவில் நில மசோதா தாக்கல்: அமளியால் அவை ஒத்திவைப்பு
டெல்லி: மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி நிலம் கையகப்படுத்தும் மசோதாவை இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். இதையடுத்து அந்த மசோதாவை வாபஸ் பெறுமாறு கூறி எதிர்கட்சியினர் கோஷமிட்டனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடியது. இந்த கூட்டத் தொடர் இன்று முதல் மே மாதம் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று காலை அவை கூடியதும் சோனியா காந்தியை தரக்குறைவாக பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை பதவி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸார் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.

அவை மீண்டும் கூடியதும் மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி நிலம் கையகப்படுத்தும் மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு எதிரான நில மசோதாவை வாபஸ் பெறுமாறு அவர்கள் கோஷமிட்டுனர்.
இத்தனை அமளிக்கு நடுவில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் இருந்து இந்தியர்களை மீட்டது குறித்த அறிக்கையை வாசித்தார்.
அவர் பேசும் சப்தத்தை விட எதிர்கட்சியினரின் கோஷங்கள் தான் அதிகமாக கேட்டது. இருப்பினும் அவர் தனது அறிக்கையை தொடர்ந்து வாசித்தார். எதிர்கட்சியினரின் அமளியால் அவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications