கச்சத்தீவில் இலங்கை கடற்படை கண்காணிப்பு கோபுரத்தை அமைக்கவில்லை: மத்திய அரசு விளக்கம்
டெல்லி: கச்சத்தீவில் இலங்கை கடற்படை கண்காணிப்பு கோபுரத்தை அமைக்கவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு மத்திய அரசு தாரை வார்த்துக் கொடுத்தது. இதற்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கச்சத்தீவை மீட்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தை இடித்து புதிய தேவாலயம் கட்டும் பணியை இலங்கை கடற்படை தொடங்கியுள்ளது. ஆனால் கச்சத்தீவில் பிரமாண்ட முகாம், கண்காணிப்பு கோபுரத்தை இலங்கை கடற்படை நிர்மாணிப்பதாக சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பாக இலங்கைக்கான இந்தியத் தூதரிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டிருந்தது. இதனிடையே கச்சத்தீவில் இலங்கை கடற்படை கண்காணிப்பு கோபுரத்தை அமைக்கவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் விகாஸ் ஸ்வரூப் கூறியதாவது:
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியர் தேவாலயம் 1905ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. அந்தத் தேவாலயம் பாழடைந்துள்ள நிலையில் ஆண்டுதோறும் அங்கு பிப்ரவரியில் திருவிழா நடத்தப்படுகிறது. அதையொட்டி தேவாலயமும் அவ்வப்போது சீரமைக்கப்படும்.
கடந்த பிப்ரவரி 22-ந் தேதி நடைபெற்ற கச்சத்தீவு திருவிழாவின் போது யாழ்ப்பாண பிஷப் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க தற்போதுள்ள புனித அந்தோணியர் தேவாலயம் அருகே சுமார் 100 மீட்டர் தொலைவில் புதிய தேவாலயம் கட்டப்படுகிறது. இந்த கட்டுமானப் பணியை இலங்கை கடற்படை மேற்கொண்டுள்ளது.
அத்துடன் ஏற்கெனவே உள்ள பழைய தேவாலயத்தை சீர்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவில் இருந்து மீனவர்கள் ஆண்டுதோறும் பங்கேற்பர். கடந்த ஆண்டு 4,003 பேரும், இந்த ஆண்டு பத்திரிகையாளர்கள் 26 பேர் உள்பட 3,248 பேரும் பங்கேற்றனர்.
கச்சத்தீவில் கண்காணிப்பு கோபுரம் போன்ற கடற்படைக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவலை இலங்கை கடற்படை மறுத்துள்ளது.
இவ்வாறு விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications