இலங்கைக் கடற்படை அட்டகாசம்.. 15 மீனவர்களை சிறைபிடித்தது.. படகுகளும் பறிமுதல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 15 பேரை இலங்கைக் கடற்படையினர் படகுகளோடு சிறை பிடித்துச் சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களை நடுக் கடலில் மறித்து அடிப்பதும், விரட்டுவதும், கைது செய்வதும், துப்பாக்கியால் சுடுவதுமாக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது இலங்கைக் கடற்படை.
இந்த நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 15 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்துச் சென்றுள்ளது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 3000 மீனவர்கள், 500க்கும் மேற்பட்ட படகுகளில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலையில் நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இலங்கைக் கடற்படையினர் விரைந்து வந்தனர். மீனவர்களை எச்சரித்து சத்தம் போட்டனர். சில படகுகளில் ஏறி மீன்பிடி வலைகளை அறுத்து கடலில் வீசினர். பின்னர் 2 படகுகளையும், அதில் இருந்த 9 மீனவர்களையும் பிடித்துச் சென்றனர்.
இதே போல தலைமன்னார் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 6 மீனவர்களையும் அவர்களது படகையும் கடற்படையினர் பிடித்துச் சென்றனர்.