நீதிபதிகளுக்கு எதிராக மதுரை வழக்கறிஞர்கள் ஊழல் ஒழிப்புப் பேரணி
மதுரை: கட்டாய ஹெல்மெட் சட்டத்தை எதிர்த்து கடந்த 40 நாட்கள் தொடர்ந்து போராடிய வழக்கறிஞர்கள் தற்போது அந்த போராட்டத்தை நீதித்துறையில் உள்ள ஊழலுக்கு எதிரானதாக மாற்றியுள்ளனர். "நீதிபதிகள் நாடாளும் மன்னனும் அல்ல! வழக்கறிஞர் அடங்கிப் போகும் அடிமைகளும் அல்ல" என்ற போஸ்டர்கள் மதுரையின் முக்கிய இடங்களை ஆக்கிரமித்துள்ளன.
கடந்த 2ம் தேதி நீதிபதிகளுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடத்திய வழக்கறிஞர்கள். "நீதித்துறை ஊழலே அனைத்து ஊழலின் பாதுகாவலன்" என்ற பெயரில் மதுரையில் இன்று நீதித்துறை ஊழல் ஒழிப்புப் பேரணியும் அதன் தொடர்ச்சியாக ஆர்பாட்டத்தையும் இன்று நடத்தினர்.

இன்று நடைபெற்ற பேரணியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் பங்கேற்றனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தொடங்கிய பேரணி கோரிப்பாளையம் தேவர் சிலை வழியாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையை அடைந்தது.
அங்கு நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய வழக்கறிஞர்கள், ஊழல் நீதிபதிகளுக்கு எதிராக முழக்கமிட்டனர். கடந்த 65 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான நீதிபதிகள் லஞ்சம், ஊழல், பாலியல், அதிகார மீறல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார்கள். இதில் மிகவும் கேவலமாக நடந்து, குற்றம் நிரூபணமாகிய கீழமை நீதிமன்ற நீதிபதிகள் சிலர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆனால், உயர், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நிலை என்ன? என்றாவது ஒரு நீதிபதி மீது லஞ்சம்-ஊழல் குற்றத்திற்கு வழக்கு, விசாரணை நடந்ததுண்டா? இல்லை நீதிபதிகள் அனைவரும் யோக்கியர்களா? என்றும் கேள்வி எழுப்பினர்.

ஹெல்மெட் பிரச்சினையில் தொடங்கிய வழக்கறிஞர்களின் போராட்டம் இப்போது நீதித்துறையில் ஊழலுக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications