லஞ்சம்... அரசு ஊழியர்கள் மீது பாரபரட்சமில்லா நடவடிக்கை- வாளை சுழற்றும் பிணராயி விஜயன்
திருவனந்தபுரம்: லஞ்சம் வாங்குகிற அரசு ஊழியர்கள் மீது பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா முதல்வர் பிணராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கேரளா முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் திருவனந்தபுரத்தில் தலைமை செயலக ஊழியர்களிடையே நேற்று பிணராயி விஜயன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஊழற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை தர வேண்டும் என்பதுதான் எங்களது கொள்கை. ஆட்சியாளர்கள் மாறி, மாறி வருவார்கள். ஆனால் ஆட்சி நிர்வாகம் அதே நிலையில் தொடர வேண்டும்.

லஞ்சம், ஊழலை அரசு ஒருபோதும் ஆதரிக்காது. ஊழல் குற்றச்சாட்டுக்களில் தொடர்புடைய அரசு ஊழியர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
லஞ்சம் வாங்கும் நோக்கத்தோடு, பொதுமக்களின் கோரிக்கை நிராகரித்து தாமதப்படுத்தும் அரசு ஊழியர்கள் எந்த பதவியில் இருந்தாலும் அவர்கள் பதில் கூறியே ஆகவேண்டும். பொதுமக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யாமல் காலம் தாழ்த்தும் நடவடிக்கை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. பணியின்போது மொபைல் போன் உபயோகத்தை குறைக்க ஊழியர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட வேண்டும். தாமதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கூடுமானவரை இ பைலிங் முறையை நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
மின்னணு நிர்வாகத்தை தலைமைச் செயலகத்தில் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்கள் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது; இடமாறுதல்கள் முறையாக மேற்கொள்ளப்படும்.












Click it and Unblock the Notifications