பெங்களூர் பள்ளிக்குள் நுழைந்த சிறுத்தை....படம்பிடிக்க போன போட்டோகிராபர்கள் மீது பாய்ந்து தாக்கியது!
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூர் விப்ஜியார் பள்ளியில் நுழைந்த சிறுத்தை 14 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்டது. சிறுத்தையை படம் பிடிக்க போன பத்திரிகை போட்டோகிராபர்கள், வனத்துறை அதிகாரிகள் என பலரையும் சிறுத்தை தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.
பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் விப்ஜியார் பள்ளியில் ஒரு சிறுத்தை நடமாடுவதை வாட்ச்மேன் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் பள்ளி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார்.

கேமராவில் சிறுத்தை
அவர்கள் பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்கள். அப்போது அதிகாலை நேரத்தில் ஒரு சிறுத்தை பள்ளிக்குள் புகுந்த காட்சிகள் பதிவாகி இருந்தன.

வெளியே வந்த சிறுத்தை
இதனைத் தொடர்ந்து போலீசாருக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசாரும், வனத்துறையினரும் அங்கு விரைந்து வந்து பள்ளிக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். பட்டாசுகளை வெடித்து வெளியேற்ற முயற்சித்த போது அறையைவிட்டு வெளியே வந்தது சிறுத்தை.

பாய்ந்து தாக்கியது
ஆக்ரோஷத்துடன் வெளியே ஓடிவந்த சிறுத்தை அங்கு இருந்த போலீசார், வனத்துறையினரை நோக்கி பாய்ந்தது. முதலில் வன அலுவலர் முதுகில் பாய்ந்து தாக்கியது சிறுத்தை. அவர் சிறுத்தையின் பிடியில் இருந்து தப்பி ஓடினார்.

சிக்கிய போட்டோகிராபர்
அப்போது பள்ளிகூட கேட்டின் மீது ஏறி பத்திரிகை போட்டோகிராபர் ஒருவர் தப்பிக்க முயன்றார். சிறுத்தையும் கேட் மீது தாவி பாய்ந்து அந்த போட்டோகிராபரை தாக்கி கீழே இழுத்துப் போட்டது.

கேமராவுடன் மல்லுகட்டிய போட்டோகிராபர்
அதேபோல் மற்றொரு போட்டோகிராபரையும் சிறுத்தை தாக்கியது. அவர் கையில் கேமராவுடன் துணிச்சலுடன் சிறுத்தையுடன் மல்லுக்கட்ட அது அவரை விட்டு விட்டு ஓடியது. இப்படியாக போக்கு காட்டிய சிறுத்தையை கடைசியில் மயக்க ஊசி போட்டு பிடித்தனர்.

14 மணிநேர போராட்டம்
14 மணிநேர பெரும் போராட்டத்துக்குப் பின்னர் சிறுத்தை சிக்கியதால் மாணவர்களும் பெற்றோரும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். பிடிபட்ட சிறுத்தை வனப்பகுதிக்கு கொண்டு சென்றுவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications