தமிழக பக்தர்கள் வரத்து குறைந்தது... திருப்பதி வெறிச்சோடியது!
திருப்பதி: ஆந்திராவில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதால் தமிழக - ஆந்திரா எல்லைகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் திருப்பதி செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
திருப்பதி வனப்பகுதியில் ஆந்திரா போலீசாரால் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர போலீசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் தாக்கப் பட்டு வருகின்றன. ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனால், ஆந்திரா - தமிழக எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், திருப்பதிக்கு செல்லும் தமிழக பக்தர்களின் கூட்டம் குறைந்துள்ளது. தமிழகத்தில் இருந்து பக்தர்கள் செல்லாததால் திருப்பதி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
ஓரிரு பேருந்துகளைத் தவிர சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் பேருந்துகள் இரண்டாவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.