ஏர் இந்தியா விமானத்தில் பல்லி பன்... அதிர்ச்சியடைந்த பயணி
டெல்லி: பட்டர் பன்... கிரீம் பன் சாப்பிட்டிருப்போம். ஆனால் பல்லி பன் சாப்பிட்டிருக்கிறீர்களா? ஏர்இந்தியா விமானத்தில்தான் பயணி ஒருவருக்கு பல்லி பன் கொடுத்துள்ளனர் விமான பணிப்பெண்கள். டெல்லியில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவில்தான் பல்லி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியாவிற்கு சொந்தமான ஏ.ஐ. 111 என்ற விமானம், டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் (ஐ.ஜி.ஐ) இருந்து வியாழக்கிழமையன்று மதியம் 1மணிக்கு லண்டன் புறப்பட்டது. அப்போது விமானத்தில் பயணித்தவர்களுக்கு ஏர் இந்தியா சார்பில் உணவு வழங்கப்பட்டது. அதில் ஒரு பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்தது. இதனால் அதிர்ச்சிடைந்த பயணி, இது குறித்து விமான பணிப்பெண்களிடம் புகார் கூறினார். இதையடுத்து விமானப்பணிப் பெண்கள் அவருக்கு மாற்று உணவை வரவழைத்து கொடுத்தனர். எனினும் அந்த பயணி அந்த உணவை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.
Lizard found in Air India in-flight meal
http://t.co/Bdm5b8yotM via@timesofindia
— Divya Saxena Rastogi (@Divsbabs) June 13, 2015
லண்டன் சென்றடைந்ததும் இது குறித்து ஏர்இந்தியா நிறுவன அதிகாரிகளுக்கு அந்த பயணி எழுத்து முலமாக புகார் அளித்தார். ஆனால் அவரது புகார் மனுவுக்கு ஏர்இந்தியா தரப்பில் எந்த பதிலும் இல்லையாம்...! இந்த பல்லி பன் சமூக வலைத்தளங்களில் தற்போது சுற்றி வருகிறது. ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது.
இதனிடையே உணவில் பல்லி இருந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு கூறியுள்ளார்.