அதிமுக அமளி.. நாள் முழுக்க லோக்சபா ஒத்திவைப்பு.. அந்தரத்தில் தொங்குகிறது நம்பிக்கை இல்லா தீர்மானம்
டெல்லி: அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் அமளி காரணமாக, லோக்சபா நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது. இதனால், நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று விவாதத்திற்கே வரவில்லை.
மத்திய அரசுக்கு எதிராக லோக்சபாவில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளன.
இந்த நிலையில், அதிமுக எம்பிக்கள், காவிரி விவகாரத்திற்காகவும், தெலுங்கு தேசம் எம்பிக்கள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தியும் லோக்சபாவில், காலை முதல், தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். இதன்பிறகு அவை கூடியபோது, மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் எழுந்து, "நாம் நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி விவாதிக்கலாம். அரசு தயாராக உள்ளது. உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும்" என்றார். ஆனால், எம்.பிக்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.
அப்போது சுமித்ரா மகாஜன் தலையிட்டு, நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீசுகள் எனக்கு வந்துள்ளன. அதுகுறித்து முடிவெடுக்க வேண்டுமானால், அவை அமைதியாக இருக்க வேண்டும். அமைதியாக இல்லாவிட்டால், நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீசை அவையில் எடுத்து வைக்க முடியாது என்றார்.
இருப்பினும், அமளி தொடர்ந்ததால், லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக சுமித்ரா மகாஜன் அறிவித்தார். இதையடுத்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது இன்று எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முன்னதாக, அமளி காரணமாக ராஜ்யசபாவும் இன்று நாள் முழுக்க ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
காலையில், நாடாளுமன்ற வளாகத்தில், காவிரி விவகாரத்திற்காக அதிமுக எம்.பிக்கள் பதாகைகளை ஏந்தி தர்ணா நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.