அக்கட தேசமான ஆந்திராவை ஆளப்போவது யார்? ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்
Recommended Video

அமராவதி: தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தங்களை ஆளப்போகிறவர்கள் தீர்மானிக்கும் இந்த தேர்தலில் ஆந்திர மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள்.
மக்களவை தேர்தல் இன்று தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்டமாக நாடு முழுவதும் 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 91 மக்களவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்த வருகிறது.
இதேபோல் ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று சட்டமன்ற தேர்தல் நடந்து வருகிறது.

மக்களவை தேர்தல்
இதில் தமிழ்நாட்டுக்கு பக்கத்து மாநிலமான ஆந்திராவில் உள்ள 25 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடந்து வருகிறது. இதில் 319 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதேபோல் மொத்தம் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடந்து வருகிறது. இதில் 2118 பேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

டிஆர்எஸ் வெற்றி
ஆந்திரா மாநிலம் கடந்த 2014ம் ஆண்டு ஜுன் மாதம் ஆந்திரா, தெலுங்கானா என இரண்டாக பிரிக்கப்பட்டது. இதன் பின்னர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான டிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது.

டிடிபி தனித்து போட்டி
இன்று ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் நடந்து வருகிறது. தற்போது ஆளும் தெலுங்கு தேசம் கட்சி, தனது 37 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக தனித்து போட்டியிடுகிறது.இதேபோல் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஒரு அணியாகவும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி தனித்தும் போட்டியிடுகிறது.

இயந்திர கோளாறு
ஆந்திரா முழுவதும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சில இடஙகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதியிலும், ஜெகன் மோகன் ரெட்டி புலிவேந்துலா தொகுதியிலும், பவன் கல்யாண் பீமாவரம் மற்றும் கஜவாக்கா ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

முதல்வர் யார்
இந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி, பவன் கல்யாண் இடையே மும்முனை போட்டி நிலவுவதால் ஆந்திர அரசியலில் பரபரப்பு காணப்படுகிறது. யார் வெல்லப்போகிறார்கள் என்பது மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications