தேர்தலுக்கு முன்பே பாஜகவுக்கு ஒரு சீட்! குஜராத் சூரத்தில் வெற்றி! காங்கிரஸ் வேட்பு மனு நிராகரிப்பு!
சூரத்: குஜராத் மாநிலம் சூரத் லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர், காங்கிரஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு பதிலாக மாற்று வேட்பாளர் சுரேஷ் பத்ஷலா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய 18-வது லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த முதல் வெற்றி இது.
குஜராத்தின் சூரத் லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளராக முகேஷ் தலால் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். காங்கிரஸ் கட்சியின் நிலேஷ் கும்பானி, பகுஜன் சமாஜ் கட்சியின் பியாரேலால் பாரதி உட்பட 8 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர். சூரத் தொகுதியில் மே 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற இருந்தது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். அத்துடன் 8 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக சூரத் மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான சவுரவ் பார்கி கூறுகையில், வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுக்களில் சாட்சி கையெழுத்துகள் வேறுபட்டிருந்தன. இந்த கையெழுத்துகள் போலியானவை. அதேபோல காங்கிரஸின் மாற்று வேட்பாளர் சுரேஷ் பத்சலாவின் கையெழுத்துகளும் வேறுபட்டிருந்தன. இதனால் இருவரது வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்றார்.
இதனால் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால், வாக்குப் பதிவுக்கு முன்னரே போட்டியின்றி தேர்வாகிவிட்டார். இது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளையும் கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தற்போதைய 18-வது லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தமது சமூக வலைதளப் பக்கங்களில் இது அப்பட்டமான மேட்ச் பிக்ஸிங். சூரத்தின் சிறு குறு தொழில் வர்த்தகர்கள் மோடி அரசாங்கம் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால்தான் இத்தகைய அராஜக நடவடிக்கையில் பாஜக இறங்கிவிட்டது என கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆனால் குஜராத் மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டீல்,, சூரத் லோக்சபா தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்ற முகேஷ் தலாலுக்கு வாழ்த்துகள்; பாராட்டுகள் என சமூக ஊடகங்களில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மொரார்ஜி தேசாய் வென்ற சூரத் லோக்சபா தொகுதி: சூரத் தொகுதியில் 1951 முதல் 1977 வரை காங்கிரஸ் வென்றது. நாட்டின் 4-வது பிரதமர் மொரார்ஜி தேசாய் 1957 முதல் 1977-ம் ஆண்டு வரை சூரத் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பின்னர் 1977 தேர்தலில் ஜனதா கட்சி வென்றது. 1980, 1984-ல் மீண்டும் காங்கிரஸ் வென்றது. 1989-ம் ஆண்டு முதல் தற்போதைய 2024-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 10 தேர்தல்களிலும் பாஜகவே வென்றுள்ளது. பாஜகவின் காசிராம் ராணா 6 முறை இத்தொகுதி எம்பியாக இருந்தார். தர்ஷனா ஜர்தோஷ், 2009, 2014, 2019-ல் பாஜக எம்பியாக இருந்தார். தற்போது 10-வது முறையாக பாஜகவின் முகேஷ் தலால் போட்டியின்றி எம்பியாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications