லோக் சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானம்.. காங்கிரஸின் வியூகம் என்ன?.. பரபர திட்டங்கள்
நாளை மத்திய பாஜக அரசுக்கு எதிராக லோக்சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.
டெல்லி: நாளை மத்திய பாஜக அரசுக்கு எதிராக லோக்சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. இதில் கடைசி நேரத்தில் எந்த விதமான மாற்றமும் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
சரியாக 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் லோக் சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. அதுவும் பாஜக ஆட்சியே மீண்டும் இந்த பிரச்சனையில் சிக்கி இருக்கிறது.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு பின் பல முக்கியமான விஷயங்களும் திட்டமிடலும் இருக்கிறது. அடுத்த வருட தேர்தலை குறிக்கோளாக கொண்டு இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே நடந்தது
ஏற்கனவே 2003ல் பாஜக ஆட்சியில் இருந்த போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி வகித்து வந்தது. ஆனால் அப்போதும் பாஜக கட்சிக்கு பெரும்பான்மை இருந்தது. 312 பேர் பாஜகவிற்கு ஆதரவு அளித்து பாஜக பெரிய வெற்றி பெற்றது.
பயன் என்ன வந்தது
ஆனால் இதில் தோல்வி அடைவோம் என்று தெரிந்தே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இதற்காக அப்போது எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்தது. அதேபோல், நம்பிக்கையில்லா தீர்மானம் நடந்த சில மாதங்களில் பெரிய மாநிலங்களில் சிலவற்றில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருந்தது.
காரணம் ஒன்று
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை தெலுங்கு தேசம் கட்சிதான் கொண்டு வந்தது. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் தனியாக தீர்மானம் கொண்டு வந்தது. இந்த நிலையில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 50க்கும் அதிகமான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருக்கிறது. இதனால், இந்த தீர்மானம் மூலம் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இருக்கிறது. இது அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.
காரணம் இரண்டு
இன்னும் சில மாதங்களில் 5 மாநிலங்களில் வரை தேர்தல் நடக்க இருக்கிறது. மத்திய பிரதேசம் , சட்டீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வது பெரிய பலத்தை கொடுக்கும். அதேபோல் பாஜக அத்தனை வலுவாக இல்லை என்ற தோற்றத்தை அம்மாநில மக்களுக்கு இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு செல்லும்.
பிரச்சனைகள் வெளியே தெரியும்
இந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் மாநில பிரச்சனைகள் அதிக அளவில் எதிரொலிக்கும். இது எல்லா மாநிலத்திலும் பலமாக மாறலாம் என்று என்று நினைத்துக் கொண்டு இருக்கும் பாஜகவிற்கு பெரிய பிரச்சனையாக மாறும். மாநிலத்தில் பலமாக இருந்த கட்சிகள் , இருக்கும் கட்சிகள் எல்லாம் மீண்டும் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்க இந்த வாக்கெடுப்பு உதவும்.உதாரணமாக இதுவரை அதிமுகவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த பாஜக நாளை அதிமுகவின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
நல்ல நேரம்
மிக முக்கியமாக இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு, அடுத்த வருடம் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மிக முக்கியமான மாற்றத்தை உண்டாக்கும். பாஜக வலுவாக இருக்கிறது என்ற பிம்பத்தை உடைக்க எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை பயன்படுத்திக் கொள்ளும். அதேபோல் மாநில கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக ஒன்று கூடவும் இது வழிவகுக்கும்.
பிரச்சனை
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் முழுக்க முழுக்க பாஜகவிற்கு எதிராகவே முடியும். முடிவு என்னவோ பாஜக வெற்றி பெறும். பாஜகவிடம் பெரும்பான்மை இருக்கிறது. ஆனால், இதன் விளைவுகள் பாஜகவிற்கு எதிராகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. நாளை, லோக் சபாவில் மோடி கண்ணீர் விட்டு ஏதேனும் பேசினாலன்றி இந்த நம்பிக்கையில்லா தீர்மானமும் மூலம் பாஜக எந்த பலனும் அடைய முடியாது.