”ஓரினச்சேர்க்கை” குற்றமில்லை மசோதா லோக்சபாவில் மீண்டும் தோல்வியடைந்தது!
டெல்லி: நாடாளுமன்றத்தில் அனுமதி கோரப்பட்ட ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருத இயலாது என்ர மசோதாவிற்கு உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்ததால் அம்மசோதா தோல்வி அடைந்தது.
ஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என்று இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377 கூறுகிறது. இந்த சட்டப்பிரிவில் மாற்றம் செய்யக்கோரி லோக்சபாவில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர் தனி நபர் மசோதா ஒன்றை கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி கொண்டு வந்தார். அப்போது அந்த மசோதா அறிமுக நிலையிலேயே தோல்வியை சந்தித்தது.
இந்தநிலையில் நேற்று அவர் 2 ஆவது முறையாக அதே மசோதாவை லோக்சபாவில் அறிமுகம் செய்வதற்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜனின் அனுமதியை கோரினார்.
ஆனால் அறிமுக நிலையிலேயே இந்த மசோதாவுக்கு ஆளுங்கூட்டணி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். டிவிசன் ஓட்டெடுப்புக்கு விட வேண்டும் என்று அவர்கள் கோரினர். அதைத் தொடர்ந்து டிவிசன் ஓட்டெடுப்பு நடந்தது. அதில் மசோதா அறிமுகத்துக்கு எதிராக 58 பேரும், ஆதரவாக 14 பேரும் வாக்களித்தனர். ஒரு உறுப்பினர் ஓட்டெடுப்பை புறக்கணித்து விட்டார். இதனால் அறிமுக நிலையிலேயே மசோதா தோல்வி அடைந்தது.