தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்... 97% மழை பெய்யும் - இந்திய வானிலை மையம்
2018ஆம் ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையான மழைக்காலத்தில் 97% மழைப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
டெல்லி: இந்த ஆண்டு மழைக்காலத்தில் போதிய மழைப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழை பொழிவை தரும் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கும். செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும்.
இந்தியாவின் விவசாய உற்பத்தியை நிர்ணயிப்பதில் தென்மேற்கு பருவமழை முக்கிய பங்காற்றுகிறது. தென் மேற்கு பருவமழை தொடங்குவதற்கு இரண்டு மாத கால அவகாசம் உள்ளது. பருவமழை நன்றாக இருந்தால் உற்பத்தி அதிகரிக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும்.
பருவமழை கணிப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் இது குறித்து திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2018ஆம் ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையான மழைக்காலத்தில் 97% மழைப்பொழிவு இருக்கும்" என்றும் 5% கூடுதலாகவோ குறைவாகவோ மழைப்பொழிவு இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பருவமழை சூப்பர்
கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி ஸ்கைமெட் வெதர் என்ற தனியார் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பிலும் இதே போன்ற தகவல் கூறப்பட்டது. அதில் 100% மழைப்பொழிவு உறுதி என்றும் 5% கூடுதலாகவோ குறைவாகவோ மழைப்பொழிவு இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தற்போது வந்திருக்கும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் உறுதிசெய்திருக்கிறது.
கேரளாவில் தொடங்கும் மழை
இந்த ஆண்டு மே 15 ஆம் தேதியன்று கேரளாவில் பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும், பருவமழை விவசாயிகளுக்கு கை கொடுக்கும் என்றும், தண்ணீர் பற்றாக்குறை நீங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
பருவமழை இயல்பாக இருக்கும்
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நாட்டில் இயல்பான மழைப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய பொது இயக்குநர் கே.ஜி.ரமேஷ் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் பருவமழை இயல்பாக இருக்கும். அதாவது, நீண்ட கால சராசரியில் 97 சதவிகித மழைப்பொழிவு இந்த ஆண்டு இருக்கும். மழை துவங்கும் அறிவிப்பு மே மாதம் வெளியிடப்படும் என்று கூறினார்.
153 மாவட்டங்கள் வறட்சி
இதனிடையே இந்திய வானிலை மையம் நாடு முழுவதும் உள்ள 588மாவட்டங்களில் மழைப்பொழிவின் அளவுக் குறித்து ஆய்வு செய்தது. அதில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே 153 மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
மழைப்பொழிவு குறைவு
கடந்த ஆண்டு மழைப்பொழிவு குறைந்த 404 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 109 மாவட்டங்களில் லேசான வறட்சி நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் 153 மாவட்டங்கள் கடும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளதாக கூறிய இந்திய வானிலை ஆய்வு மையம், கடந்த குளிர்காலத்தில் மழைப்பொழிவு குறைந்ததே இந்த வறட்சிக்குக் காரணம் என்று அறிவித்துள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு