போரில் இழப்புகள் முக்கியமல்ல.. இறுதி முடிவு என்ன என்பதே முக்கியம்! ஆபரேஷன் சிந்தூர் பற்றி தலைமை தளபதி முக்கிய கருத்து
புனே: ஆபரேஷன் சிந்தூர் குறித்து முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் சில நாட்களுக்கு முன்பு கூறிய கருத்துகள் பேசுபொருள் ஆனது. இதற்கிடையே மீண்டும் அவர் ஆபரேஷன் சிந்தூர் குறித்துப் பேசியிருக்கிறார். இழப்புகள் என்பது எப்போதும் முக்கியமானது இல்லை என குறிப்பிட்ட அவர், மோதலின் இறுதி முடிவு என்பதே முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருந்தது. அப்போது இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவம் திணறிப் போனது. அப்போது ஏற்பட்ட மோதலில் இந்தியாவுக்கும் சில இழப்புகள் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், அப்போது ராணுவம் இதை உறுதி செய்யவில்லை.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சியின்போது முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்தார். அதில் அவர், போர் விமானங்களை இந்தியா இழந்துள்ளதை உறுதி செய்தார். எவ்வளவு ஜெட் விமானங்களை இழந்தோம் என்பதை விட ஏன் இழந்தோம் என்பதே முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அவரது பேச்சு இணையத்தில் பேசுபொருள் ஆனது. பலரும் இந்தச் சூழலில் இன்று புனே பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இழப்புகள் முக்கியமில்லை என்று குறிப்பிட்ட அவர், நமது ஆபரேஷனின் விளைவு என்ன என்பதே முக்கியம் என்று தெரிவித்தார்.
மேலும், ஆயுதப் படைகள் தங்கள் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் சிறு பின்னடைவுகளைச் சந்திக்கும்போது செயலற்ற நிலையில் இருக்க முடியாது என்றும் ஜெனரல் சவுகான் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜெனரல் சவுகான் மேலும் கூறுகையில், "ஆபரேஷன் சிந்தூரை வைத்து நான் போரின் தன்மையை விளக்க முயன்றேன். நாம் சிறந்த டிரோன் பாதுகாப்பைக் கொண்டிருக்கிறோம் என்பது தெரியும். மேலும், நமது ரிஸ்க் குறித்தும் எங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
நன்கு பயிற்சி பெற்ற பாதுகாப்புப் படைகளான எங்களுக்குப் பின்னடைவுகள் மற்றும் இழப்புகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.. நமது தவறுகளைப் புரிந்துகொண்டு சரி செய்ய முடியும். பின்னடைவுகள் பார்த்து அமைதியாக இருக்க முடியாது. நான் முன்பே குறிப்பிட்டது போல இழப்புகள் என்பது முக்கியமானது இல்லை.. இறுதி முடிவு என்ன என்பதே முக்கியம்" என்றார்












Click it and Unblock the Notifications