மோடி, சோனியா, அத்வானி தொகுதிகள் உள்பட 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
டெல்லி: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, பாஜக தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத்சிங், முரளிமனோகர் ஜோஷி, அருண் ஜேட்லி உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 9 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இந்த தேர்தல் நடைபெற இருக்கிறது.
லோக்சபாவுக்கு இதுவரை 6 கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. இன்று 7-ம் கட்டமாக 89 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. 7 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் இத்தேர்தல் நடைபெறுகிறது.
குஜராத்தில் 26 தொகுதிகளிலும், ஆந்திரா 17, உத்தரப்பிரதேம் 14, பஞ்சாப் 13, மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

பீகாரில் 7 தொகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீர், யூனியன் பிரதேசங்களான தத்ரா நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகியவற்றில் தலா ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி, நரேந்திர மோடி போட்டியிடும் குஜராத்தின் வதோதரா, அத்வானி போட்டியிடும் காந்திநகர், பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் போட்டியிடும் லக்னோ, மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா போட்டியிடும் ஸ்ரீநகர் ஆகியவை இன்றைய தொகுதிகளில் முக்கியமானவை.
இதேபோல் பாஜகவின் முரளி மனோகர் ஜோஷியும் உமாபாரதியும் முக்கிய வேட்பாளர்களில் சிலர். பஞ்சாப்பின் அமிர்தசரஸ் தொகுதியில் பாஜகவின் மூத்த தலைவர் அருண் ஜேட்லியும் அம்மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங்கும் தேர்தலை எதிர்கொள்கின்றனர்.
தெலுங்கானா தேர்தல் ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டுவிட்ட நிலையில் தெலுங்கானா சட்டசபைக்கும் இன்றுதான் முதல் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 119 சட்டசபை தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதேபோல் தெலுங்கானாவின் 17 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
தெலுங்கானாவில் இன்றைய தேர்தலை சந்திரசேகர் ராவ், அவரது மகள் கவிதா, நடிகை விஜயசாந்தி என ஏகப்பட்ட பிரபலங்கள் எதிர்கொள்ள இருக்கின்றனர். சந்திரசேகர் ராவ் லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளில் இரண்டிலும் போட்டியிடுகிறார். விஜயசாந்தி மேடக் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார்.












Click it and Unblock the Notifications