மக்கள் கேட்கிறார்கள்.. நேதாஜி குறித்த எஞ்சிய ஆவணங்களை வெளியிடுங்கள்: மோடிக்கு மம்தா 'செக்'
கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட 64 வகை ஆவணங்களை மேற்கு வங்க அரசு இன்று வெளியிட்ட நிலையில், முழு ஆவண விவரங்களையும் பிரதமர் வெளியிட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பாக மத்திய அரசிடம் 135க்கும் மேற்பட்ட ஆவணங்கள் உள்ளன. அதில் 64 ஆவணங்களை இன்று மேற்கு வங்க அரசு வெளியிட்டு, கொல்கத்தாவின் போலீஸ் மியூசியத்தில் காட்சிப்படுத்தியுள்ளது.

மத்திய அரசிடமுள்ள எஞ்சிய ஆவணங்களில் மேலும் பல முக்கிய தகவல்கள் உள்ளன. மம்தாவின் நடவடிக்கையால், எஞ்சிய ஆவணங்களை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு சிக்கியுள்ளது. அவ்வாறு வெளியிடாவிட்டால் அதையே பிரச்சார ஆயுதமாக்க மம்தா திட்டமிட்டுள்ளார். அவரது இன்றைய பேட்டியும் அதை உறுதி செய்கிறது.
மியூசியத்தில் ஆவணங்களை பார்க்க சென்ற மம்தா அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், "நேதாஜி குறித்த தகவல்களை அறிந்துகொள்ள மேற்கு வங்க மக்கள் ஆர்வத்தோடு உள்ளனர். கொல்கத்தா மட்டுமில்லாமல், சென்னை, பஞ்சாப் என எங்கு திரும்பினாலும், நாடு முழுவதிலும் அதுகுறித்த ஆர்வம் உள்ளது.
நேதாஜி பற்றிய விவரங்களை வெளியிட்டால் சில நாடுகளுடனான ராஜாங்க உறவு பாதிக்கப்படும் என்று மத்திய அரசு கூறிவருகிறது. நாம் ஒரு சுதந்திரமான நாடு. நமது தலைவர் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தும் சூழ்நிலை வரும்போது பிற நாடுகளை பார்த்து பயப்பட தேவையில்லை. இன்னும் எத்தனை காலம்தான், இதை மறைக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது..
ஆவணங்களை வெளியிட்டால் கலவரம் வெடிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. கலவரம் வெடித்தால் அதை சமாளிப்பது பற்றி அறிவோம். நேதாஜி, சர்தார் வல்லபாய் பட்டேல், பகத்சிங் போன்றோரை மக்கள் ஹீரோக்களாக பார்க்கிறார்கள். அதில் நேதாஜி குறித்த தகவலை மட்டும் மறைப்பது நியாயம் இல்லை". இவ்வாறு மம்தா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications