இந்திரா ஒருமைப்பாட்டு விருது 2012: ‘பசுமைப்புரட்சியின் தந்தை’ எம்.எஸ்.சுவாமிநாதன் தேர்வு
டெல்லி: இந்திர ஒருமைப்பாட்டு விருதுக்கு வேளாண்துறை விஞ்ஞானியும், பசுமைப்புரட்சித் திட்டத்தின் தந்தை என அழைக்கப் படுகிறவருமான எம்.எஸ்.சுவாமிநாதனின் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரில் தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுக்கான இந்த விருதுக்கு வேளாண்மை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தேர்வாகியுள்ளார்.
இந்த விருதோடு ரூ 5 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட இருக்கிறது. இந்த தகவலை விருது குழுவின் உறுப்பினர் செயலாளர் மோதிலால் வோரா தெரிவித்தார்.

பசுமைப்புரட்சியின் தந்தை....
வேளாண்மைத்துறை விஞ்ஞானியும் பசுமை புரட்சி திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.சுவாமிநாதன், தாவரயியலில் மரபணு மாற்றத்தை ஏற்படுத்தியவர்.

பல்வேறு பணிகளில்....
தற்போது 88 வயதாகும் எம்.எஸ்.சுவாமிநாதன் கடந்த 1966-ம் ஆண்டு முதல் 1972 வரை டெல்லியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி மைய இயக்குனராகவும் 1972-ம் ஆண்டு முதல் 1979 வரை இந்திய வேளாண் ஆராய்ச்சித்துறையின் பொது இயக்குனராகவும், இந்திய அரசு வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் கல்வியியல் துறையின் செயலாளராகவும் பணியாற்றியவர்.

வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்....
தமிழ்நாட்டை சேர்ந்தவரான இவரது பெயரில் சென்னையில் பெரிய அளவில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விருது வழங்கும் விழா....
விருது வழங்கும் விழா வரும் 31-ந் தேதி இந்திராகாந்தி நினைவு தினத்தன்று டெல்லியில் நடக்க இருக்கிறது.

இதற்கு முன்...
இதற்கு முன்பு இந்திராகாந்தி நினைவு தேசிய ஒருமைப்பாட்டு விருது, அருணா ஆசப்அலி, பி.என்.ஹாக்சர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஏ.பி.ஜே.அப்துல்கலாம், சங்கர் தயாள் சர்மா, ராஜீவ்காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.












Click it and Unblock the Notifications