50லி டேங்கில். 57 லிட்டர் பெட்ரோல் எப்படி.. ஐகோர்ட் நீதிபதியை ஏமாற்றிய பெட்ரோல் பங்க்.. பாய்ந்த ஆக்சன்
மத்திய பிரதேச மாநிலத்தில் அம்மாநில ஐகோர்ட் நீதிபதியிடம் மோசடி செய்த ஜபல்பூர் பெட்ரோல் பங்க் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் அம்மாநில ஐகோர்ட் நீதிபதியிடம் மோசடி செய்த பெட்ரோல் பங்க் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. 50 லிட்டர் கொள்ளளவு உள்ள பெட்ரோல் டேங்கில் 57 லிட்டர் பெட்ரோல் நிரப்பியதாக கூறியதால் வசமாக சிக்கி இருக்கிறதாம் ஜபல்பூரில் உள்ள குறிப்பிட்ட பெட்ரோல் பங்க். அந்த பங்க்கை சீல் வைத்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
பெட்ரோல் பங்கில் அவ்வப்போது மோசடி நடப்பதாகப் புகார்கள் வரும். தண்ணீர் கலந்துவிட்டதாகவும், குறைவான பெட்ரோல் போட்டதாகவும் புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதேநேரம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களோ அப்படி எல்லாம் மோசடி செய்ய முடியாது என்று மறுத்தும் வருகிறார்கள்.
மத்திய பிரதேச மாநிலத்தில் நீதிபதியிடமே பெட்ரோல் பங்கில் மோசடி நடந்திருப்பதாக கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

57 லிட்டர்
பிரபல ஆங்கில ஊடகம் அறிக்கையின்படி, நீதிபதி ஒருவர் (பெயர் குறிப்பிடப்படவில்லை) ஜபல்பூரில் தனது காரில் நிரப்புவதற்காக கூறப்பட்ட பெட்ரோல் பம்பிற்குச் சென்றுள்ளார். இருப்பினும், காரின் எரிபொருள் டேங்க் கொள்ளளவு 50 லிட்டராக இருந்தபோதிலும், அவர் 57 லிட்டருக்கான பில் பெற்றிருக்கிறார். பில்லை பார்த்து தவறு நடந்திருப்பதை உணர்ந்த நீதிபதி அதிர்ச்சி அடைந்தார்.

பலர் ஏமாற்றம்
அந்த பில்லைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதி என்னுடைய காரின் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 50 லிட்டர்தான். ஆனால், அதில் எப்படி 57 லிட்டர் நிரப்ப முடியும்' எனக் கேள்வி எழுப்பி உள்ளார். அத்துடன் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனே போன் செய்தார். புகாரின் பேரில், உள்ளூர் அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை நடத்தி பெட்ரோல் பம்பிற்கு சீல் வைத்தனர். விசாரணையில், அந்த பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர்கள் பலர் இவ்வாறாக ஏமாற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதையடுத்தே அந்த பெட்ரோல் பங்க்மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எல்லா இடங்களிலும்
இதற்கிடையே வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 10), ஜபல்பூர் மாவட்ட நிர்வாகம் 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அந்த குழு, நகரில் உள்ள அனைத்து பெட்ரோல் பம்புகளையும் ஆய்வு செய்தது. இந்த குழுவில் நாப்டோல் துறை, பெட்ரோலிய நிறுவனங்கள் மற்றும் உணவு-சிவில் வழங்கல் துறை அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.

கடும் நடவடிக்கை
இந்த தகவலை ஜபல்பூர் உணவு மற்றும் சிவில் சப்ளை மாவட்டக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றும் கமலேஷ் தண்டேகர் உறுதிப்படுத்தினார். இதற்கிடையில், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 'தவறாக பில்லிங்' செய்யும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் எச்சரித்தார். பெட்ரோல் பங்கில் உயர்நீதிமன்ற நீதிபதியிடமே ஏமாற்ற நடந்த முயற்சி மத்திய பிரசேதத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications