ம.பி.: பெண்ணுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி மிரட்டிய இன்ஸ்பெக்டர் மகன் கைது
போபால்: மத்திய பிரதேசத்தில் அசிங்கமாக எஸ்.எம்.எஸ். அனுப்பியதுடன், இணையதளத்தில் போலியான ஆபாச படங்களை வெளியிடுவேன் என்று ஐ.ஏ.எஸ். படிக்கும் பெண்ணை மிரட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகன் கைது செய்யப்பட்டார்.
மத்திய பிரதேச மாநிலம் ரேவா நகரில் உள்ள இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகன் அகுய்ல் பராஸ் கான்(21). முதலாம் ஆண்டு பி.டெக். படிக்கும் அவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். அவர் டெல்லியைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். படித்து வரும் பெண் ஒருவரின் செல்போனுக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். மேலும் அவரது போலியான ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என 2 வாரங்களாக மிரட்டியும் உள்ளார்.
அந்த பெண்ணின் தந்தை பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரி. இந்நிலையில் அந்த பெண் டெல்லி போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணுக்கு எஸ்.எம்.எஸ். வந்த செல்போன் எண் போலி அடையாள அட்டை காட்டப்பட்டு மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் வாங்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர். இதையடுத்து டெல்லி போலீஸ் தனிப்படை ரேவா விரைந்து சென்று கான் சிம் கார்டு வாங்கிய கடைக்கு சென்றனர்
கடைக்காரர் அந்த சிம் கார்டை இன்ஸ்பெக்டரின் மகன் கானுக்கு கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் இன்ஸ்பெக்டரின் வீட்டுக்கு சென்று கானை கைது செய்தனர்.
விசாரணையில் கான் போலீசாரிடம் கூறுகையில்,
ட்ரூகாலர் அப்ளிகேஷன் மூலம் ஏதாவது எண்ணுக்கு கால் செய்வேன். அது பெண்ணாக இருந்தால் தொடர்ந்து கால் செய்வதுடன், எஸ்.எம்.எஸ். அனுப்புவேன். இதுவரை இதே போன்று 15 பெண்களுக்கு தொல்லை கொடுத்துள்ளேன். அவர்கள் மத்திய பிரதேசம் மற்றும் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்றார்.