பண உதவி கேட்ட சிறுவனின் தலையை செருப்புக் காலால் உதைத்துத் தள்ளிய பெண் அமைச்சர்: தீயாய் பரவும் வீடியோ
போபால்: தன்னிடம் பண உதவி கேட்ட சிறுவனை, மத்தியப் பிரதேச கால்நடை வளர்ப்புத் துறை பெண் அமைச்சர் செருப்புக் காலால் உதைத்துத் தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் கால்நடை வளர்ப்பு துறை அமைச்சர் குசும் மெதலே. இவர் தூய்மை இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று பண்ணா மாவட்டத்திற்கு சென்றிருந்தார். பேருந்து நிலையம் அருகே துப்புரவு பணியில் ஈடுபட்ட அமைச்சர், நிகழ்ச்சி முடிந்து புறப்பட காரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அமைச்சரிடம் பண உதவி கேட்டுள்ளான் 14 வயது சிறுவன் ஒருவன்.

அச்சிறுவன் ஒரு ரூபாய் மட்டுமே கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தன் முன் மண்டியிட்டு விழுந்த அச்சிறுவனை தனது செருப்பு அணிந்த காலால் அமைச்சர் உதைத்துள்ளார். உடனடியாக அச்சிறுவனை அமைச்சரின் பாதுகாவலர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து அமைச்சர் புறப்பட்டுச் சென்றார்.
இந்தக் காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அமைச்சர் ஒருவர், பண உதவி கேட்ட சிறுவனை மனிதாபிமானம் இன்றி காலால் உதைத்துத் தள்ளிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications