ராமர் தவம் செய்த சித்ரகூட்! அயோத்தி அளவுக்கு மாற்ற ம.பி. அரசு திட்டம்.. என்ன ஸ்பெஷல்?
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த சித்ரகூட் மாவட்டத்தை அயோத்தி போல் மாற்ற அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் பிறந்த இடமான ராம ஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. சுமார் 2.7 ஏக்கர் நிலப்பரப்பில் எல் அன்ட் டி நிறுவனத்தால் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2020 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் நிகழ்ந்தது. கோயில் வளாகத்தின் நடுவில் குழந்தை ராமர் கருவறை, சூரியன், விநாயகர், சிவன், துர்க்கை, அன்னபூரணி மற்றும் அனுமன் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.
இந்த கோயிலில் வரும் 22 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதை உலகில் வாழும் பெரும்பாலான மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அயோத்தியில் இப்போதே விழா களைகட்டத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் அயோத்தியை போல் சித்ரகூட்டையும் முக்கிய வழிபாட்டு தலமாக்க மத்திய பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ளது சித்ரகூட். காடுகள் அடர்ந்த பகுதியில் இது அமைந்துள்ளது. இங்கு பல்வேறு கோயில்கள் உள்ளன. ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்ட கதை நினைவிருக்கிறதா, சீதா, லட்சுமணன் ஆகியோருடன் ராமர் சில மாதங்கள் சித்ரகூட்டில் தங்கியிருந்து அனுசுயா, அத்ரி, மார்க்கண்டேயர் போன்ற முனிவர்களுடன் தவம் செய்ததாக ராமாயணத்தில் கூறப்படுகிறது.
இதனால் அமாவாசை, பவுர்ணமி, தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ, பண்டிகைகளின் போது இங்கு பெருங்கூட்டமாக மக்கள் கூடுவர். இங்குள்ள மந்தாகினி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடுவர். இந்த சித்ரகூட் மலைத் தொடர்கள் காமத் மலை, அனுமான் மலை, சீதை குளம், லட்சுமணன் மலை என புகழ் வாய்ந்த மலைகளை கொண்டது.
இத்தகைய சிறப்புகளை கொண்ட இந்த இடத்தை வழிபாட்டு தலமாக மாற்ற மத்திய பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியிலிருந்து ரூ 400 கோடி கடன் பெற போகிறதாம். இந்த திட்டத்தை அந்த மாநில முதல்வர் மோகன் யாதவ் நேற்று தெரிவித்திருந்தார்.
அவர் அமைச்சரவை கூட்டத்தில்தான் சித்ரகூட்டை அயோத்தி அளவுக்கு மேம்படுத்துவது குறித்து முதல்வர் தெரிவித்துள்ளார். அது போல் இந்த திட்டம் குறித்து ஸ்ரீராமசந்திர காமன் அறக்கட்டளை நிர்வாகிகளுடனும் முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார். சாத்னா மாவட்டத்தில்தான் இந்த சித்ரகூட் அமைந்துள்ளது.
இது குறித்து விரிவான திட்டம் தயாரிக்க நிபுணர் குழு அமைக்கப்படும் என தெரிகிறது. சித்ரகூட் உள்ளிட்ட பல்வேறு புனித தலங்களை ஒன்றிணைக்க 1450 கி.மீ. பாதை அமைக்கப்படும். இது போன்ற திட்டம் குறித்து முதலில் 2004 ஆம் ஆண்டு கூறியவர் அப்போதைய முதல்வர் உமா பாரதி. அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு அந்த மாநில முதல்வராக இருந்த சிவ்ராஜ் சிங் சவுகான் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அது முதல் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு தற்போது முதல்வர் மோகன் யாதவால் மீண்டும் கொண்டு வரப்படுகிறது.












Click it and Unblock the Notifications