"பாரத் மாதா ஜெய்" என்று சொல்ல மறுத்த முஸ்லிம் வாலிபர்கள் மீது டெல்லியில் தாக்குதல்
டெல்லி: பாரத் மாதா கி ஜெய் என்ற கோஷத்தை முழங்க மறுத்த மதரசா பள்ளி மாணவர்கள் 3 பேர் தாக்கப்பட்ட சம்பவம் தலைநகர் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி புறநகர் பகுதியிலுள்ளது பேகம்பூர். இங்குள்ள மதரசா ஒன்றில் படித்து வருபவர்கள் தில்கஷ், அஜ்மல் மற்றும் நயீம். 17 முதல் 18 வயது நிரம்பிய இவர்கள், நேற்று அருகேயுள்ள பூங்கா ஒன்றில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, 5 பேர் கொண்ட கும்பல், இவர்களிடம் வந்து பாரத் மாதா ஜெய் என சொல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
பாரத் மாதா ஜெய் என்ற வார்த்தையை நாங்கள் கூற மாட்டோம் என்று அந்த 3 இஸ்லாமிய வாலிபர்களும் கூறியுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், 5 பேரும், இம்மூன்று வாலிபர்களை தாக்க தொடங்கியுள்ளனர்.
இதனால், அந்த வாலிபர்கள் அருகேயுள்ள மதரசாவிற்குள் ஓடி தப்பிக்கொண்டனர். இதில் ஒரு வாலிபருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், மற்ற இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று அடையாளம் தெரியவில்லை. இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications