மேகி தடையை எதிர்த்து நெஸ்லே வழக்கு... உத்தரகண்ட் அரசுக்கு நோட்டீஸ்
டேராடூன்: உத்தரகண்ட் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மேகி நூடுல்சை விற்பனை செய்ய தடை விதித்துள்ளன. இந்நிலையில், தடையை எதிர்த்து உத்ரகண்ட் மாநில நீதிமன்றத்தில் நெஸ்லே நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அடுத்த 15 நாட்களில் மனு மீது விளக்கம் அளிக்குமாறு உத்ரகண்ட் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே, இந்தியாவில் பல்வேறு உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அவற்றின் தயாரிப்புகளில் ஒன்றுதான் மேகி நூடுல்ஸ். இதில் மோனோசோடியம் குளூடாமேட் என்ற ரசாயன உப்பு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம் கலக்கப்பட்டுள்ளதாகவும் இது உடல் நலத்துக்குத் தீங்கானது என்றும் சமீபத்தில் செய்தி வெளியானது.

உத்தரப் பிரதேசத்தில்தான் இந்த புகார் முதலில் எழுந்தது. இதையடுத்து மேலும் பல மாநிலங்களும் மேகி நூடுல்ஸை தர ஆய்வுக்கு அனுப்பியுள்ளன. மத்திய அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணை யமும் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை தர ஆய்வுக்கு அனுப்பியுள்ளது.
மேகி விற்பனைக்கு தலைநகர் டெல்லி, கேரளா, குஜராத், தமிழகம், உத்தரகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்கள் தடைவிதித்துள்ளன. இதனிடையே, தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் மத்திய அரசு தாமாகவே முன்வந்து நெஸ்லே நிறுவனம் மீது மேகி விவகாரத்தில் புகார் செய்துள்ளது. 30 வருட பழமைமிக்க நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள ஒரு பிரிவின்கீழ் முதல்முறையாக இந்த புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications