தீயாய் எரியும் நதிநீர் பிரச்சினை.. போர்க்களமான பெங்களூர்.. மாஜி துணை முதல்வர் மண்டை உடைப்பு
Recommended Video
பெங்களூர்: மகதாயி நதி நீர் விவகாரம் கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. மகதாயி பிரச்சினையை சரி செய்வதாக பாஜக தலைவர் எடியூரப்பா கூறிவிட்டு, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருடன் ஆலோசனை நடத்தினார். ஆனால் அவரோ வெறும் வாக்குறுதி கடிதம் மட்டும் அளித்துவிட்டு கப்சிப் ஆகிவிட்டார்.
இதனால் கோபமடைந்த விவசாயிகள் பாஜக தலைவர்களை குறி வைத்து போராட்டங்களை அவிழ்த்துவிட்டுள்ளனர்.
பெங்களூரில் கர்நாடக மாநில பாஜக அலுவலகத்தின் எதிரே வட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தர்ணா நடத்தி வருகிறார்கள். ஹூப்ளியில் பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் வீட்டு முன்பாகவும் சில நாட்களாக தொடர்ந்து தர்ணா நடத்தி வருகிறார்கள்.
ஆளுநர் மாளிகைக்கு பேரணி
பெங்களூரில் இன்று ஆளுநரை சந்தித்து மனு அளித்த விவசாய சங்க பிரதிநிதிகள், பாத யாத்திரையாக அங்கு வந்தனர். ஆனால் போலீசார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். விவசாய பிரதிநிதிகள் நால்வரை மட்டும் ராஜ்பவனுக்குள் அனுமதித்தனர்.
தேர்தல் ஆணையத்திடம் மனு
இதனிடையே குடிநீர் பிரச்சினையால் 6 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், கர்நாடகாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து இன்று விவசாயிகள் மனு அளித்தனர்.
மண்டை உடைப்பு
அதேநேரம், ஆளும் காங்கிரஸ் அரசு மீது விவசாயிகள் கோபத்தை திருப்பும் முயற்சியில், பாஜக தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பெங்களூர் குயின்ஸ் ரோட்டிலுள்ள காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில தலைமையகம் எதிரே பாஜக தலைவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த தர்ணாவின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக் (பாஜக) தலையில் காயம் ஏற்பட்டது. போலீசார் உடனடியாக அவரை அருகேயுள்ள மல்லையா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தலையில் பெரிய கட்டுபோடப்பட்டது. பிறகு அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
மாஜி பெண் அமைச்சர்
இதேபோல பாஜகவை சேர்ந்த முன்னாள் பெண் அமைச்சரும், எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளருமான ஷோபா கரந்தலாஜே, காங்கிரஸ் அலுவலகம் எதிரே சாலையில் படுத்து போராட்டம் நடத்தினர். பெண் போலீசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர்.