மகாராஷ்டிரா: 15 ஆண்டுகால காங்கிரஸ்- தேசியவாத காங். கூட்டணியும் உடைந்தது!!
மும்பை: மகாராஷ்டிராவில் 25 ஆண்டுகால சிவசேனா- பா.ஜனதா கூட்டணி உடைந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து கூட்டணி அரசை நடத்தி வந்த காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடையேயும் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் உடைந்து போனது.
மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளைக் கொண்ட சட்டசபைக்கு அக்டோபர் 15-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.
ஆனால் தொகுதிப் பங்கீட்டு பஞ்சாயத்தால் பிரதான அரசியல் கட்சிகளின் கூட்டணிகள் உடைந்து போய்விட்டன. பாஜக சிவசேனாவும் தாங்கள் போட்டியிட விரும்பிய தொகுதிகளை விட்டுக் கொடுக்க இறங்கி வராததால் நேற்று அக்கூட்டணி உடைந்தது.

124 தொகுதிகள்..
அதேபோல்தான் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் தற்போது அதிகாரப்பூர்வமாக முறிந்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின் போது தேசியவாத காங்கிரசுக்கு 114 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இம்முறை 10 தொகுதிகளை கூடுதலாக ஒதுக்கி, 124 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

பேச்சுவார்த்தை
அதன்பிறகு இரு கட்சி தலைவர்களும் ஒன்று கூடி ஆலோசிக்கவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

சரிபாதி வேண்டுமே..
அப்போது மொத்தம் உள்ள 288 சட்டசபை தொகுதிகளில் சரிபாதியாக 144 தொகுதிகளை தேசியவாத காங்கிரஸ் கேட்டது. மேலும் கூட்டணி வெற்றி பெற்றால் முதல்வர் பதவியை சுழற்சி அடிப்படையில் இரு கட்சிகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

வேட்பாளர் பட்டியல் வெளியீடு
இந்த இரண்டு கோரிக்கைகளையும் காங்கிரஸ் நிராகரித்தது. இதற்கு மத்தியில் காங்கிரஸ் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல்கட்டமாக 116 தொகுதிகளில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் முதல்வர் பிரிதிவிராஜ் சவான், சதாரா மாவட்டத்தில் உள்ள தெற்கு காரட் தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் 15 ஆண்டு கால கூட்டணியும் முறிந்ததாக கூறப்பட்டது.

தேசியவாத காங். ஆலோசனை
இந்த நிலையில் அடுத்த கட்ட முடிவு எடுப்பது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று துணை முதல்வர் அஜித்பவார் வீட்டில் நடந்தது. இதில் கட்சியின் தேசிய தலைவர் சரத்பவார், மாநில தலைவர் சுனில் தத்காரே, துணை முதல்வர் அஜித்பவார், மூத்த தலைவர்கள் சகன் புஜ்பால், பிரபுல் பட்டேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வெளியேற முடிவு..
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக முடிவு எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரு கட்சிகளும் தனித்து போட்டியிட இருப்பதாக அந்த கட்சிகளின் தலைவர்கள் அறிவித்தனர்.

ஈகோதான்..
இக்கூட்டணியிலும் யார் பெரிய கட்சி? சுழற்சி முறையில் முதல்வர் பதவி ஆகியவைதான் முக்கிய பிரச்சனைகள். காங்கிரஸைப் பொறுத்தவரையில் தாங்களே பெரிய கட்சி என்றும் தேசியவாத காங்கிரஸோ மகாராஷ்டிராவில் நாங்களே பெரிய கட்சி என்றும் வெளிப்படுத்திய ஈகோதான் இப்படி 15 ஆண்டுகால கூட்டணியை முறிக்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications