மகாராஷ்டிரா பரபர அரசியல்.. ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் நிதின் கட்காரி திடீர் சந்திப்பு!
நாக்பூர்: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து பேசினார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றிய பாரதிய ஜனதா கட்சி, சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க இருக்கிறது. யார் முதல்வர் என்பது குறித்து பரபரப்பான விவாதம் நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னிலை வகிக்கிறார் என்று அக்கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருந்தார்.
மத்திய அமைச்சரான நிதின் கட்காரியோ தாம் மாநில அரசியலுக்குத் திரும்பப் போவதில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்த நிதின் கட்காரி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்தார்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிதின் கட்காரி, நான் மோகன் பகவத்தை சந்தித்தேன். தீபாவளியின் போது நடக்கும் வழக்கமான வருகைதான் இது. மகாராஷ்டிரா அரசியல் மற்றும் முதல்வர் பதவி ஆகியவை தவிர பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம் என்றார்.