அதிகாலையே பரபரப்பு.. ஜெய்ப்பூர் ரிசார்ட்டுக்கு சென்ற மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்எல்ஏக்கள்
ஜெய்ப்பூர்: குதிரை பேரத்தை தவிர்ப்பதற்காக மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெரும்பாலானோர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேர்தலுக்கு முன்பாக கூட்டணி அமைத்து இருந்த பாஜக மற்றும் சிவசேனா ஆகிய இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி அரசு அமைக்க போதுமான பலம் இருந்தாலும் கூட, சரி பாதி பங்கு ஆட்சியில் வழங்கப்பட வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கையால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று பாஜக குழு, மாநில ஆளுநரை சந்தித்து நிலைமை குறித்து விவரித்தது. சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்து எம்எல்ஏக்களை இழுத்து சென்று அரசு அமைக்க பாஜக முயற்சி செய்யக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள் ஏற்கனவே ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில்தான், காங்கிரஸ் ஆட்சி நடைபெறக்கூடிய ராஜஸ்தான் மாநிலத்தில், மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெரும்பாலானோர் இன்று அதிகாலை சென்றுள்ளனர். தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி 44 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மக்களால் மறக்க முடியாத வெள்ளிக்கிழமை.. இதே நவ.8ம் தேதி.. பணமதிப்பிழப்பு நாள் இன்று!
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24ஆம் தேதி வெளியாகின. 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபையில் குறைந்தபட்சம் 145 எம்எல்ஏக்களையாவது பெற்றுள்ள கட்சியால்தான் ஆட்சி அமைக்க முடியும். பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றன. முதல்வர் பதவி தங்களுக்கு, தேவை என்று சிவ சேனா வலியுறுத்துவதால், பாஜக சிவசேனா கூட்டணி தலைவர்கள் இடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை. எனவே அரசு அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.