6 பேரை கொலை செய்து பண்ணை வீட்டில் புதைத்த மகாராஷ்டிரா டாக்டர் கைது... அதிர்ச்சி தகவல்கள்
சதரா: மகாராஷ்டிராவில் 6 பேரை கடத்திக் கொலை செய்து பண்ணை வீட்டில் புதைத்த டாக்டர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் டாக்டர். சந்தோஷ் பால். இவர் தற்போது 'டாக்டர் டெத்'(Dr.Death)என அழைக்கப்படுகிறாராம். இதற்கு காரணம் என்னவென்றால் சந்தோஷ் பால் 5 பெண்கள் உள்பட 6 பேரை கொலை செய்து தனது பண்ணை வீட்டில் புதைத்துள்ளார் என்பது தான்.
முன்னதாக 49-வயது பெண் ஒருவரை சந்தோஷ் பால் கடத்திக் கொலை செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து சந்தோஷ் பால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
மங்கள் ஜுதே என்ற பெண் புனேவில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக சதாரா பகுதியில் உள்ள வய் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால், அவர் பேருந்து ஏறவில்லை. மாறாக அதன் பின்னர் அவர் மாயமாகிவிட்டார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில், போலீஸார் மங்க ஜுதேவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
செல்போன் தொடர்பு
மங்கள் ஜுதேவின் செல்போன் செயல்பாடுகளை தீவிரமாக போலீஸார் கண்காணித்தனர். அப்போது, அப்பகுதியில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலையில் இருந்து மங்கள் ஜுதேவின் செல்போன் சிக்னல் கிடைத்துள்ளது. செல்போன் சிக்னலை பின் தொடர்ந்த போலீஸார், டாக்டர்.சந்தோஷ் பாலின் வீட்டில் இருந்து தான் அந்த செல்போன் சிக்னல் வருகிறது என்பதை கண்டறிந்தனர்.
நர்ஸிடம் விசாரணை
இது தொடர்பாக சந்தோஷ் பாலின் மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, டாக்டர். பால், மங்கள் ஜுதேவை கடத்தி வீரியம் மிக்க மருந்துகளை கொடுத்து கொலை செய்ததாக நர்ஸ் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் நர்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
6 பேர் கொலை என அதிர்ச்சி தகவல்
சந்தோஷ் பாலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கடந்த சில வருடங்களில் அதிர்ச்சியளிக்கும் வகையில் 6 பேரை கொலை செய்தது தெரியவந்தது. இதில் கொலை செய்யப்பட்ட சிலர் கடந்த 2003-ம் ஆண்டு முதல் மாயமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொலை செய்யப்பட்ட 5 பெண்கள், 1 ஆண் சடலத்தை அவர் தனது பண்ணை வீட்டில் புதைத்துள்ளார்.
அதிக வீரியம் கொண்ட மருந்துகள்
வீரியம் மிக்க அபாயகரமான மருந்துகளை அவர்களுக்கு தேவைக்கு அதிகமாக கொடுத்தது கொலை செய்ததாக சந்தோஷ் பால் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
எதற்காக கொலை செய்தார்?
டாக்டர்.சந்தோஷ் அவரது உதவியாளரான ஜோதி மந்த்ரே மற்றும் ஜுதேவுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜுதேவுக்கு, சந்தோஷ்-ஜோதி மந்த்ரே இடையே உள்ள தொடர்பு பிடிக்கவில்லையாம். சந்தோஷிடம், அவர் செய்த குற்றத்தை வெளியில் சொல்லிவிடுவேன் என மிரட்டியுள்ளார் ஜுதே.
கடத்திக் கொலை
இதனால், சந்தோஷ் மற்றும் ஜோதி மந்த்ரே இணைந்து ஜுதேவை கடத்தியுள்ளனர்.
பின்னர், ஜுதேவுக்கு வீரியம் மிக்க மருந்துகளை அதிகளவில் கொடுத்து கொலை செய்த அவர்கள், உடலை சந்தோஷ் பாலின் பண்ணை வீட்டில் புதைத்தது தெரியவந்துள்ளது.
புதைத்த இடத்தில் தோண்ட திட்டம்
இந்நிலையில், அவர் முன்னதாக கொலை செய்த 5 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. சல்மா ஷாய்க், ஜகாபாய் பால், சுரேகா சிகானே, வனிதா
காய்க்வாத், மற்றும் நத்மால் பண்டாரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.வனிதா காய்க்வாத் உடலை தவிர இதுவரை நான்கு பேரின் உடல்களை போலீஸார் தோண்டி எடுத்துள்ளனர். வனிதா காய்க்வாத் என்பவரை கொன் டாக்டர்.சந்தோஷ் பால் கடந்த 2008-ம் ஆண்டு கொலை செய்து அவரது உடலை அணைக்கட்டில் வீசிவிட்டாராம்.
மற்றவர்களை கொலை செய்தது ஏன் என்பது குறித்து டாக்டர்.பாலிடம் போலீஸார்
தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.