44 சுங்க சாவடிகள் மூடல்: மகாராஷ்டிரா அரசு அதிரடி!
டெல்லி: மகாராஷ்டிராவில் 44 சுங்க சாவடிகளை மூடுவதாக அம்மாநில சட்டசபையில் துணை முதல்வர் அஜித் பவார் அதிரடியாக அறிவித்தார்.
மகாராஷ்டிராவில் சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த பிப்ரவரியில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா நடத்திய போராட்டம் வன்முறைக்கு திரும்பியது.
இந்த நிலையில் நேற்று கோலாப்பூரில் சிவசேனா, பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரமாண்ட பேரணி நடத்தி சுங்க கட்டணத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்தின.
லோக்சபா தேர்தலிலும் கூட சுங்க கட்டண பிரச்சினையை எதிர்க்கட்சிகள் ஆயுதமாக எடுத்து பிரசாரம் செய்தன. காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தோல்விக்கான காரணங்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாநிலத்தில் 44 சுங்க சாவடிகள் மூடப்படும் என்று நேற்று மகாராஷ்டிரா சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய துணை முதல்வர் அஜித் பவார் அறிவித்தார்.
விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த முக்கியத்துவம் வாய்ந்த முடிவை அரசு எடுத்து உள்ளது.