மகாராஷ்டிரா தேர்தல்: சிவசேனாவுக்கு முதல்வர் பதவி- பா.ஜ.க கூட்டணியில் உடன்பாடு!
மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் சிவசேனா கட்சிக்கு முதல்வர் பதவியை ஒதுக்க சிவசேனா-பாரதீயஜனதா கட்சிகளிடையே ஒப்பந்தமாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க. மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து பல்வேறு தேர்தலை சந்தித்து உள்ளன. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இவ்விரு கூட்டணி கட்சிகளும் அபார வெற்றி பெற்றிருந்தன.

இந்நிலையில், வரும் அக்டோபர் மாதம் டெல்லி, ஹரியானா மாநிலங்களுடன் மகாராஷ்டிராவிற்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் சிவசேனாவுக்கு முதல்வர் பதவி வழங்குவது என பா.ஜ.க., சிவசேனா கட்சிகளின் தலைவர்களிடையே நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத்தும் உறுதிப்படுத்தி உள்ளார்.
உத்தவ் தாக்கரே அழைப்பு
இதனிடையே மகாராஷ்டிர சட்டப்பேரவையில் சிவசேனையின் காவிக் கொடி பறக்க வேண்டும் என்றும், பால் தாக்கரேவின் ஆசையை நிறைவேற்ற சிவ சேனை தொண்டர்கள் தயாராக வேண்டும் என்றும் அக்கட்சியின் தலைவர் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்ற சிவ சேனையின் 18 வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, அக்கட்சி சார்பில் மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் நேற்று வெற்றிக் கொண்டாட்ட வீதி உலா நடத்தப்பட்டது.
அதில் தலைமையேற்ற சிவ சேனை தலைவர் உத்தவ் தாக்கரே பேசும்போது, "அடுத்தக் கட்டமாக நமது இலக்கு, மகாராஷ்டிரா சட்டப்பேரவைதான். சிவ சேனையின் காவிக் கொடி அதன் உச்சியில் பறக்க வேண்டும். நமது தலைவர் பால் தாக்கரேவின் கனவு நினைவாக வேண்டும்.
இதற்காக நாம் தயாராக வேண்டும். நாட்டின் முதன்மை மாநிலமாக மகாராஷ்டிரம் மாற வேண்டும். மும்பையை உலகளாவிய நகராக மாற்ற வேண்டும்.
மும்பையின் குடிசைப் பகுதிகளையும் உள்கட்டமைப்பு திட்டங்கள் மூலம் மேம்படுத்த வேண்டும்" என்றார் உத்தவ் தாக்கரே.
உத்தவ் தாக்கரே தனது வெற்றி உரையின்போது பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டு எதுவும் பேசவில்லை. மேலும், மகாராஷ்டிர தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மை கிடைத்தால் முதல்வர் ஆவேன் என்று நவ நிர்மான் சேனைத் தலைவர் ராஜ் தாக்கரே குறிப்பிட்டது குறித்தும் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications