விஸ்வரூபமெடுக்கும் ஜெ.மரணம்: ராஜ்யசபாவில் ஒத்தி வைப்பு தீர்மானத்துக்கு நோட்டீஸ் கொடுத்த ஓபிஎஸ் டீம்!
ராஜ்யசபாவில் ஜெ. மரணம் தொடர்பாக விவாதிக்க கோரி ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார் ஓபிஎஸ் அணியின் எம்.பி. மைத்ரேயன்
டெல்லி: ஜெயலலிதா மரணம் தொடர்பான விவாதிக்க கோரி ராஜ்யசபாவில் ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளது ஓபிஎஸ் அணி.
ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த கோரி வருகிறது அதிமுகவின் ஓபிஎஸ் அணி. இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நாளை ஓபிஎஸ் அணி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறது.
இதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டு தமிழக அரசு சார்பில் நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அப்பல்லோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டது.
ஆனால் இந்த அறிக்கைகளுக்குப் பின்னர் விடைதெரியாத பல கேள்விகள் பூதாகரமாக கிளம்பிவிட்டன. இந்த நிலையில் ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரியிடம் ஓபிஎஸ் அணியின் எம்.பி. மைத்ரேயன் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸ் கொடுத்தார்.
அதில், நாளை மறுநாள் தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது பகுதியில் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. ஓபிஎஸ் அணிக்கு மொத்தமாக நாடாளுமன்றத்தில் 12 எம்.பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விடாது கருப்பு!