மும்பை பர்னிச்சர் மார்கெட் பகுதியில் பயங்கர தீ விபத்து.. தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
மும்பை பர்னிச்சர் மார்க்கெட் பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
மும்பை: மும்பையின் ஒஷிவாரா பகுதியில் உள்ள பர்னிச்சர் மார்கெட் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மும்பை ஒஷிவாரா பர்னிச்சர் மார்கெட் பகுதி பழங்கால மார்க்கெட் பகுதியாகும். இங்கு கலை நயமிக்க மரத்தால் ஆன அழகிய நாற்காலிகள், கட்டில்கள், மேசைகள் என விதவிதமான ஃபர்னீச்சர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதுமட்டுமின்றி வீட்டு அலங்காரப் பொருட்கள் அழகிய போட்டோக்கள் என ஏராளமான பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் இயங்கி வருகின்றன.
மார்க்கெட் பகுதி என்பதால் எப்போதும் இங்கு மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். இந்நிலையில் இங்குள்ள ஒரு கடையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மரச்சாமான்கள் உள்ள பகுதி என்பதால் அருகில் இருந்த மற்ற கடைகளுக்கும் தீ மிளமளவென பரவியது.
பல அடி உயரத்துக்கு கொழுந்து விட்டு எரிந்த தீயால் அப்பகுதியே புகை மண்டலாக காட்சியளித்தது. தகவல் அறிந்து 10 வண்டிகளில் வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்த பல மணி நேரம் போராடினர். கொண்டு சென்ற தண்ணீர் தீர்ந்தும் தீயை அணைக்க முடியாமல் போனதால் 10 தண்ணீர் டேங்கர்களை வரவழைத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்தில் கயாமடைந்தவர்கள் மற்றும உயிர்ச்சேதம் குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரப்பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
Mumbai: Fire broke out at a furniture market in Oshiwara; 10 fire tenders rushed to the spot. pic.twitter.com/SkZKW3nHai
— ANI (@ANI_news) November 25, 2016