இஸ்லாமியர்களுக்கு மட்டும்தான் அதிக குழந்தைகளா? எனக்கு 5 பிள்ளைகள் உண்டு! மோடிக்கு கார்கே பதிலடி
ராய்ப்பூர்: இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி விமர்சித்து வருகிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்நிலையில், இஸ்லாமியர்களுக்கு மட்டுமதான் அதிக குழந்தைகள் இருக்கிறார்களா? எனக்கு மொத்தம் 5 குழந்தைகள் இருக்கிறார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மோடிக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸவாடாவில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய விஷயங்கள் பெரும் விவாதமாக வெடித்தது.

அதாவது, "காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று சொன்னார்கள். உங்களிடம் உள்ள தங்கம் உள்ளிட்ட சொத்துக்களை பறித்து அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்களிடம் கொடுத்து விடுவார்கள். சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஊடுருவியர்களிடம் உங்கள் சொத்துக்களை கொடுத்து விடுவார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை அவர்களிடம் கொடுக்க வேண்டுமா? இதை நீங்கள் ஏற்பீர்களா?
இதை செய்வோம் என்றுதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறார்கள். தாய்மார்கள், சகோதரிகளின் தங்க நகைகளை கணக்கெடுத்து அவற்றை உங்களிடமிருந்து பறித்து அவர்களிடம் கொடுத்துவிடுவார்கள்.
மன்மோகன் சிங் என்ன சொன்னார் தெரியுமா? நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் எனக் கூறினார். சகோதர சகோதரிகளே இதுதான் நகர்ப்புற நக்சல்களின் சிந்தனை. என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியை பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை" என்று பேசியிருந்தார். இப்படி பேசியதற்காக பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சி தலைவர்கள் புகார் அளித்திருந்தனர். தேர்தல் ஆணையமும் இது குறித்து நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், இஸ்லாமியர்களுக்கு மட்டுமதான் அதிக குழந்தைகள் இருக்கிறார்களா? எனக்கு மொத்தம் 5 குழந்தைகள் இருக்கிறார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மோடிக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது, "நாங்கள் பெரும்பான்மை மக்களிடம் சென்றுக்கொண்டிருக்கிறோம். எனவேதான் பிரதமர் மோடி, தாலி குறித்தும், இஸ்லாமியர்கள் குறித்தும் பேச தொடங்கியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி உங்கள் செல்வத்தையெல்லாம் திருடி அதிக குழந்தைகள் பெற்றவர்களிடம் கொடுக்கும் என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இஸ்லாமியர்களிடம் மட்டும்தான் அதிக குழந்தைகள் இருக்கிறார்களா? உண்மையில் ஏழைகளிடம்தான் அதிக குழந்தைகள் இருக்கிறார்கள். ஏழைகளில் செல்வம் கிடையாது. ஆனால் அவர்களின் செல்வங்களாக அதிக குழந்தைகள் இருக்கிறார்கள். ஏழைகள் எல்லா பிரிவிலும் இருக்கிறார்கள். ஆனால் ஏன் மோடி இஸ்லாமியர்களை பற்றி மட்டும் பேசுகிறார்? இஸ்லாமியர்கள் இந்த நாட்டை சேர்ந்தவர்கள். எனது பெற்றோருக்கு நான் ஒரே மகன்தான். ஆனால், எனக்கு 5 குழந்தைகள் இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications