வாரே வா.. பாஜகவுக்கு செக்.. "இது"தான் மம்தா போட்டியிடும் தொகுதி.. செம தில்.. மே.வங்கத்தில் பரபரப்பு
கொல்கத்தா: வரும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடும் தொகுதி எது என்பதை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.. இதையடுத்து அரசியல் களம் அந்த மாநிலத்தில் அடுத்தக்கட்டத்துக்கு துரித வேகத்தில் நகர்ந்துள்ளது!
இன்னும் ஒருசில மாதங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது.. அதற்கான பிரச்சாரங்களை அந்தந்த மாநிலங்களில் போட்டியிடும் கட்சிகள் தீவிரமாக கையில் எடுத்து விட்டன.. அந்த வகையில் மேற்கு வங்கமும் தயாராகி வருகிறது.
இதில், மேற்கு வங்கத்தில் வெறும் 16 எம்எல்ஏக்களை மட்டுமே வைத்து கொண்டு, 218 எம்எல்ஏக்கள் உடைய பலம்பொருந்திய திரிணாமுல் காங்கிரஸை எதிர்த்து வருகிறது பாஜக... முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாஜக தலைவர்கள் மேற்கு வங்கத்தை ரவுண்டுகட்டி வருவது மம்தாவுக்கு சற்று கலக்கத்தையே தந்தும் வருகிறது.
போட்டி
கடந்த 9 வருஷமாக ஸ்டிராங் ஆக ஆட்சியில் நீடித்து வரும் மம்தா, 2014-வரை எங்கோ கண்காணாமல் இருந்த பாஜகவை சமாளிக்க வேண்டிய நிலைமைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளார் என்பதையும் மறுப்பதற்கில்லை.. காரணம், மம்தா கட்சியில் உள்ளவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் மறைமுக முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்த சுவேந்து அதிகாரி கொஞ்ச நாளைக்கு முன்புதான் பாஜகவில் இணைந்தார்... இது மம்தா பானர்ஜிக்கு பின்னடைவாக இப்போது வரை பார்க்கப்பட்டு வருகிறது..
சுவேந்து
ஏனென்றால், கடந்த 2011-ல் இருந்தே அம்மாநில சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு வலது கரமாக இருந்தவர் சுவேந்து அதிகாரிதான்.. இவருக்கு முக்கியமான அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.. திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவரும் ஆவார்.. அன்றைய காலகட்டத்தில், நந்திகிராமில் விவசாயிகளுக்கான போராட்டத்தை முன்னெடுத்ததிலும், அதில் மம்தாவுக்கு ஏற்பட்ட அரசியல் வாழ்வின் திருப்புமுனையும் மறக்க முடியாத ஒன்று.
இடதுசாரிகள்
இதற்கு பிறகுதான் கிட்டத்தட்ட, 34 வருஷமாக ஆண்டு கொண்டிருந்த இடதுசாரிகளின் ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது.. கடந்த 2016-ல் நடந்த தேர்தலில் இதே நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு மாஸ் வெற்றியை பெற்றது சுவேந்துதான்... இப்போது சுவேந்து பாஜக பக்கம் சென்றுவிட்டதால், அந்த தொகுதியில் மம்தாவுக்கு செல்வாக்கு குறைந்துவிடும் என்றும் சலசலக்கப்பட்டது. அதேபோல, இப்போதைக்கு மம்தா பவானிபூர் தொகுதி எம்எல்ஏ-வாக இருக்கிறார்.. அதனால் அதே இடத்தில்தான் இந்த முறையும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது..
நந்திகிராம்
ஆனால், எல்லாவித யூகத்தையும் தூக்கி தூரப்போட்டுவிட்டு, நந்திகிராம் தொகுதியிலேயே, வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக மம்தா அறிவித்துள்ளார்... அங்கு நடந்த பிரச்சார கூட்டத்தில் இன்று மம்தா பேசும்போது, "வரும் தேர்தலில் நான் நந்திகிராம் சட்டமன்ற தொகுதியில்தான் போட்டியிட போகிறேன்... இதுதான் எனக்கு ராசியான இடம்.
பவானிபூர்
பவானிபூர் மக்கள் யாரும் கவலைப்பட வேணாம்.. உங்களுக்கு வேறொரு நல்ல வேட்பாளரை நானே வழங்குகிறேன். முடிந்தால் நான் 2 தொகுதிகளிலும் கூட போட்டியிடுவேன்... நந்திகிராம் எனது மூத்த சகோதரி என்றால், பவானிபூர் எனது இளைய சகோதரி.. அவ்வளவுதான்.. இன்னொரு கட்சிகளுக்கு போனவங்களை பற்றி நான் கவலைப்பட போறது இல்லை.. ஏன் என்றால், அவர்கள் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பதற்காக இப்படி அணி தாவி இருக்கிறார்கள்..
ஒருபோதும் விட மாட்டேன்
நான் உயிரோடு இருக்கும் வரை இவர்கள், இந்த மாநிலத்தை பாஜகவிடம் அடகு வைக்க ஒருபோதும் விட மாட்டேன்... வேறு கட்சிகளுக்கு சென்றவர்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள்... அவர்கள் வேண்டுமானால், இந்த நாட்டின் குடியரசு தலைவராகவும், துணை குடியரசுத் தலைவராகவும் மாறி கொள்ளட்டும். ஆனால், 2021 சட்டமன்ற தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெற்று மறுபடியும் ஆட்சியை பிடிக்கும்" என்றார்.
டென்ஷன்
சுவேந்து அதிகாரியை பொறுத்தவரை, அந்த தொகுதியில் பலமிக்கவர் ஆவார்.. அவருடைய அந்த தொகுதியின் செல்வாக்கைதான் பாஜகவும் கணக்கு போட்டு வைத்திருந்தது.. அப்போது அதே தொகுதியில் போட்டியிடப்போவதாக மம்தா பானர்ஜி அறிவித்து, மேற்குவங்கத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளதுடன், பாஜகவுக்கே டென்ஷனை எகிற விட்டுள்ளார்!