மெட்ராஸ் ஹைகோர்ட்டுக்கு சபாஷ் போட்ட மமதா.. தேர்தல் ஆணையம் மீது கடும் பாய்ச்சல்
கொல்கத்தா: தேர்தல் ஆணையம் கொரோனா கால நடைமுறைகளை சரியாக கடைப்பிடிக்கவில்லை. அதன் மீது கொலைக் குற்றமே சுமத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்துக்களை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வரவேற்றுள்ளார்.
இதை சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துச் சொல்லி தேர்தல் ஆணையம் மீது நடவடிக்கை எடுக்க முறையிடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகப் பெரிய அளவில் பரவ தேர்தல் ஆணையமே முக்கியக் காரணம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சாட்டலாம் என்றும் ஹைகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான பெஞ்ச் கடுமையாக சாடியிருந்தது.
இதை மமதா பானர்ஜி தற்போது வரவேற்றுள்ளார். இதுகுறித்து மமதா பானர்ஜி கூறுகையில், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நாங்கள் உச்சநீதிமன்றம் செல்வோம். இறுதிக் கட்ட வாக்குப் பதிவின்போது மத்திய பாதுகாப்புப் படையினரை நிறுத்துவதை எதிர்த்து முறையிடவுள்ளோம்.
தேர்தலுக்குப் பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் தேர்தல் ஆணையம் மீது வழக்கு தொடருவோம். அப்போது வாக்குப் பதிவை பல கட்டமாக நடத்தியது தவறு என்று வாதிடுவோம். வாக்குப் பதிவுகளை இணைக்குமாறு கோரியதை தேர்தல் ஆணையம் நிராகரித்ததையும் சுட்டிக் காட்டுவோம். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்களையும் சுப்ரீம் கோர்ட்டில் சுட்டிக் காட்டுவோம்.
தேர்தல் ஆணையமே கொரோனா பரவ முக்கியக் காரணம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளதை நான் வரவேற்கிறேன். தேர்தல் ஆணையம் மட்டுமல்ல பிரதமர் மோடியும்தான் இதற்குக் காரணம். சுடுகாடுகளில் இடைவிடாமல் பிணங்கள் எரிந்தபடி உள்ளன. ஆனால் மோடியோ மன்கி பாத் உரையை வாசித்துக் கொண்டுள்ளார்.
கொரோனா பாதித்த மாநிலங்களில் 2 லட்சம் படையினரை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது தேர்தல் ஆணையம். இவர்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்டவற்றில் இவர்களை பாதுகாப்பே இல்லாமல் தங்க வைத்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும். அவர்களில் முக்கால்வாசிப் பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகும் அபாயத்தில் உள்ளனர். அவர்களை கடைசிக் கட்ட வாக்குப் பதிவின்போதாவது விலக்கிக் கொள்ள வேண்டும் என்றார் மமதா பானர்ஜி.












Click it and Unblock the Notifications