கி.பி. 3016-ல் கூட மே.வங்கத்தில் இடதுசாரிகளால் ஆட்சிக்கு வர முடியாது: மமதா ஆவேசம்
கொல்கத்தா: கி.பி. 3016ஆம் ஆண்டு கூட மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளால் ஆட்சிக்கு வந்துவிட முடியாது என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
கொல்கத்தாவில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரிக் கட்சியினர் மேற்கு வங்க தலைமைச் செயலகத்தை நோக்கி வியாழக்கிழமையன்று பேரணியாகச் செல்ல முயன்றனர்.

இதை போலீசார் தடுத்ததால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. சிறிது நேரத்தில் அது வன்முறையாக வெடித்தது. இதில் 25 போலீஸார் உள்பட பலர் காயமடைந்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து மமதா பானர்ஜி கூறியதாவது:
மக்களிடம் நம்பிக்கையிழந்து, மக்களால் புறக்கணிக்கப்பட்ட இடதுசாரிக் கட்சியினர் தற்போது ஆட்சியைப் பிடிப்பதற்காக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சகிப்புத் தன்மையோ பொறுமையோ இல்லாததால்தான் அவர்கள் கற்களையும், கம்புகளையும் எடுத்துக் கொண்டு வீதிக்கு வருகின்றனர். எங்களோடு போட்டியிட நினைத்தால், உங்கள் ஆட்சிக் காலத்தில் மேற்கு வங்கம் என்ன வளர்ச்சி பெற்றது? என்ற பட்டியலை வெளியிடுங்கள்.
மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகளாக இடதுசாரிகள் ஆட்சியில் இருந்தனர். ஆனால் மாநிலத்தின் வளர்ச்சிக்காக அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. தற்போது திரிணாமுல் காங்கிரஸ் அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர்கள் இடையூறு விளைவிக்கின்றனர்.
ஒரே நிமிடத்தில் இடதுசாரிகளுக்குப் பாடம் புகட்ட எங்களால் முடியும். ஆனால், வன்முறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இன்னமும் சொல்லப் போனால் ஆயிரம் ஆண்டுகளானாலும் கி.பி. 3016ஆம் ஆண்டு கூட மேற்கு வங்கத்தில் இடஒதுசாரிகளாள் ஆட்சி அமைக்க முடியாது.
இவ்வாறு மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications