ஒரு அதிகாரியைக் கூட மாற்ற முடியாது.. தேர்தல் ஆணையத்துடன் மமதா பகிரங்க மோதல்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அதிகாரிகளை இடமாற்றம் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட போது அதை நிறைவேற்றவே முடியாது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக மறுத்து சவால்விட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலையொட்டி, தலைமை தேர்தல் ஆணையம் சம்பத் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நேற்று முன்தினம் மேற்குவங்க மாநிலத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் மால்டா, பிர்பும், பர்த்வான், மேற்கு மிட்னாப்பூர், முஷிதாபாத் ஆகிய மாவட்டங்களின் எஸ்.பிக்கள், வடக்கு 24 பர்கானா மாவட்ட ஆட்சியர் மீனா ஆகியோரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
என்ன செய்ய முடியும்?
ஆனால் இந்த இடமாற்றத்தை செய்யமுடியாது என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து ஜமால்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் மமதா பானர்ஜி பேசியதாவது:
நான் இந்த கூட்டத்துக்கு வந்தபோது 5 காவல்துறை அதிகாரிகளையும் ஒரு மாவட்ட ஆட்சியரையும் தேர்தல் ஆணையம் மாற்றி இருப்பதாக அறிந்தேன். அந்த இடங்களில் நியமிக்கப்பட வேண்டிய மாற்று அதிகாரிகளையும் தேர்தல் ஆணையமே அறிவித்துள்ளது. இதுபற்றி மாநில அரசுடன் கலந்தாலோசனை நடத்தவில்லை.
நான் தேர்தல் ஆணையத்தை மதிக்கிறேன். ஆனால், அடிபணிய மாட்டேன். நீங்கள் காங்கிரஸ் மற்றும் பாஜக சொல்வதை மட்டும்தான கேட்பீர்களா? இடதுசாரி கூட்டணி ஆட்சி நடைபெற்ற 35 ஆண்டுகள், மவுனமாக இருந்தது ஏன்?
நான் முதல்வராக இருக்கும்வரை எந்த அதிகாரியையும் மாற்ற மாட்டேன். தேர்தல் ஆணையத்துக்கும் ஒரு எல்லை இருக்கிறது. தேர்தல் ஆணையம் வேண்டுமானால், முதல்வர் பதவியை எடுத்துக்கொள்ளட்டும். எனக்கு பதவி மீது ஆசையில்லை.
நான் தேர்தல் ஆணையத்துக்கு சவால் விடுக்கிறேன். இதற்கு முன்பு இப்படி சவால் விடுத்தது இல்லை. நீங்கள் நரேந்திர மோடியின் மாநிலத்துக்கோ அல்லது சோனியா காந்தி போட்டியிடும் தொகுதிக்கோ சென்று இதுபோல் நடவடிக்கை எடுக்க முடியுமா? அப்படி எடுத்து விட்டு, அதன்பிறகு எங்கள் மீது கை வையுங்கள்.
நீங்கள் ஆசைப்பட்டதை செய்து கொள்ளுங்கள். என்னை சிறையில் கூட போடுங்கள். ஆனால், ஒரு அதிகாரியைக் கூட நான் மாற்ற மாட்டேன்.
இவ்வாறு மமதா பானர்ஜி அதிரடியாக பேசியுள்ளார்.