நெருக்கமாக இருக்கையில் எடுத்த போட்டோவை காட்டி பெண்ணை மிரட்டிய மும்பை வாலிபர்
மும்பை: மும்பையில் இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கையில் எடுத்த புகைப்படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவதாகக் கூறி மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் வடக்கு மும்பையில் உள்ள சார்கோப் பகுதியைச் சேர்ந்தவர் வைபவ். அவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரியாவுடன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) 12ம் வகுப்பு படிக்கையில் நெருக்கமாக இருக்கும்போது அதை புகைப்படம் எடுத்துள்ளார். இந்நிலையில் வைபவ் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது பிரியாவை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

பணம் கொடுக்காவிட்டால் 12ம் வகுப்பு படிக்கையில் எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதற்கு பயந்து பிரியா வைபவிடம் ரூ. 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் தனது தாயின் நகைகளை அளித்துள்ளார். அப்படியும் வைபவ் மேலும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதையடுத்து பிரியா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வைபவை கைது செய்தனர். இது போன்று நெருக்கமாக இருக்கையில் புகைப்படம் எடுத்து அதை காட்டி பெண்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications