டெல்லியில் ஏ.டி.எம். மைய கதவை திறந்தபோது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
டெல்லி: டெல்லியில் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைய முயன்றபோது மின்சாரம் தாக்கி ஒருவர் பலியாகியுள்ளார்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் சியாம்நாத் துபே(35). அவர் டெல்லி ஹொலாம்பி கலான் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தார். அவர் பணம் எடுக்க அப்பகுதியில் இருக்கும் ஏ.டி.எம். மையத்திற்கு சனிக்கிழமை காலை சென்றுள்ளார்.
காலை 11.30 மணிக்கு அவர் ஏ.டி.எம். மையத்தின் கதவை திறந்தபோது அவர் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஏ.டி.எம். மையம் அருகே மின்சார கம்பம் உள்ளது. சம்பவம் நடத்போது அங்கு மழை பெய்ததால் துபேவுக்கு ஷாக் அடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.